

தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலகம் விரைவில் கட்டப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ், முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்காக ரூபாய் 1200 கோடி நிதியும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய தலைமை செயலகத்தை கட்ட பட்டினப்பாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார்.
அன்புமணி கூறுகையில், “பட்டினப்பாக்கத்தில் தான் புதிய தலைமைச் செயலகம் அமையும் என்றால், இதில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். பாராளுமன்றத்தை அமைக்க மத்திய அரசு புதுடெல்லி என்ற நகரத்தை உருவாக்கியது. அதேபோல் சென்னைக்கு வெளியே தனியாக நிர்வாக நகரத்தை அமைக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சாந்தோம் மற்றும் காமராஜர் சாலைகளில் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால், தினந்தோறும் 1000-க்கும் மேல் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் அப்பகுதிக்கு வந்து செல்லும். இதனால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மெரினா இணைப்பு சாலைகள் முற்றிலுமாக ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படும்.
கடலோரப் பகுதியாக இருக்கும் பட்டினப்பாக்கம், அடையாறு முகத்துவாரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. பருவமழை காலங்களில் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கு பட்டினப்பாக்கத்தை விடவும் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் நெடுஞ்சாலை இணைப்புகள் உள்ள பகுதிகள் தான் எளிதாக இருக்கும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பட்டினப்பாக்கம் மட்டுமின்றி, போதிய நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து இணைப்பு அடிப்படையில் கிண்டி, கோயம்பேடு மற்றும் நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்களும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.