

இந்திய விண்வெளி துறையில் ஒரு மாபெரும் புரட்சி இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஆன விக்ரம் -I வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான பவன் குமார் சந்தனாவின் நிலுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. இந்திய விண்வெளித் துறையில் ஒரு தனியார் நிறுவனம் சாதிப்பதற்கு இவர் உத்வேகமாக இருக்கிறார்.
நாட்டில் ஏராளமான பெரும் பணக்காரர்கள் இருந்தாலும் விண்வெளி துறையில் கால் பதிக்க அவர்கள் தயங்கினர். ஆனாலும், ஐஐடி பட்டதாரியான பவன் குமார் மிகவும் துணிச்சலாக தனியார் நிறுவனத்தை தொடங்கினார். இதன் காரணமாக இவர் இந்தியாவில் எலான் மாஸ்க் என்று அழைக்கப்படுகிறார். விண்வெளித் துறையை பற்றி இந்தியாவின் இளைஞர்கள் பெரும்பாலும் சிந்திக்காத வேலையில் அதில் சாதிக்க பவன் குமார் தூண்டுகிறார்.
பவன் குமார் தனது நண்பருடன் இணைந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கினார். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இணை நிறுவனராகவும் இருக்கிறார். சிறுவயதில் கணக்கு பாடத்தில் 52 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற இவர் தனது விடாமுயற்சியின் காரணமாக, 2007 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூரில் சேர்ந்தார்.
அதன் பின்னர் இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். நீண்ட காலம் விண்வெளி துறையில் பணியாற்றிய அவர் , அங்கு பணிபுரிந்த நாக பரத் டாக்காவுடன் இணைந்து தனியார் விண்வெளி நிறுவனம் பற்றிய கனவுகளுக்கு உயிர் கொடுத்தார்.இஸ்ரோவில் இருந்து வெளியேறிய இவர்கள் இருவரும் இணைந்து 2018 ஆம் ஆண்டு , ஹைதராபாத்தில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனத்தை நிறுவினர்.
இந்த நிறுவனத்தை நடத்துவது அவர்கள் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.அவர்களின் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவது பெரிய சவாலாக இருந்தது. பவன் குமாரின் மீது நம்பிக்கை வைத்திருந்த அவரது கல்லூரி நண்பரான பின்னி பன்சால் , நிறுவனத்தில் 1.5 மில்லியன் டாலர் முதலீடு செய்தார். இவர் நாட்டின் மிகப்பெரிய ஈ காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கிரீன்கோ நிறுவனமும் இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தது.
2020 ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது முதல் ராக்கெட் இன்ஜினை வெற்றிகரமாக சோதித்து சாதனை செய்தது. இந்த ராக்கெட் இன்ஜினுக்கு அவர்கள் ராமன் –1 என்று பெயரிட்டனர். அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு விக்ரம் –S என்ற இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டினை விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தினர்.
மத்திய அரசு தனியார்களுக்கு விண்வெளி துறையை திறந்து விட்ட பிறகு , இஸ்ரோ நிறுவனத்துடன் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு 51 மில்லியன் டாலர்கள் கிடைத்தது.2026 மே 7 தேதி பிரதமர் நரேந்திர மோடியால் , ஸ்கைரூட் நிறுவனத்தின் ராக்கெட் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் 60 மில்லியன் டாலர்களையும் நிதி ஆதாரமாக அந்நிறுவனம் திரட்டி உள்ளது. அமெரிக்க போன்ற நீண்டகால விண்வெளி துறையில் அனுபவம் கொண்ட நாடுகளில் மட்டுமே தனியார் விண்வெளி நிறுவனங்கள் துவங்கப்படும் நிலையில் , இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் இரண்டு ராக்கெட்டுகளை விண்வெளியில் ஏவி ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை செய்துள்ளது.
இன்று காலையில் , ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து ஏழு அடுக்கு கொண்ட விக்ரம் –1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது. இந்த வெற்றி தனியார் விண்வெளி நிறுவனம் சாதிக்க எல்லையற்ற வாய்ப்புகளை வழங்கி உள்ளது.