
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் மண்டலத்தில் (NCR) தெருநாய்கள் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
“எல்லா இடங்களிலிருந்தும் தெருநாய்களை உடனடியாக அகற்றி, அவற்றைப் புகலிடங்களில் தங்கவைக்க வேண்டும். மீண்டும் தெருக்களில் விடக் கூடாது!” என்று டெல்லி அரசுக்கும், குருகிராம், நொய்டா, காசியாபாத் நகராட்சி அமைப்புகளுக்கும் நீதிமன்றம் கட்டளையிட்டிருக்கிறது.
ஆனால், இந்த உத்தரவு அறிவியல் பூர்வமற்றது, பயனற்றது என்று விலங்கு உரிமைகளுக்காகப் போராடும் பீட்டா (PETA) அமைப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
பீட்டா இந்தியாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் மினி அரவிந்தன், “தெருநாய்களைப் பிடித்து அடைப்பது எந்தப் பயனையும் தராது".
இது அறிவியலுக்கு முரணானது. டெல்லியில் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கும் குறைவானவை மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன.
இவற்றை வலுக்கட்டாயமாக அகற்றுவது, அவற்றை அன்போடு பராமரிக்கும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.
நாய்களுக்கும் பெரும் துன்பத்தை உருவாக்கும். இது நாய்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கோ, நாய்க்கடி சம்பவங்களைத் தடுப்பதற்கோ, கூடவே கோழை நோயை (ரேபிஸ்) கட்டுப்படுத்துவதற்கோ எந்த வகையிலும் உதவாது” என்று காட்டமாகச் சொல்கிறார்.
2001-ம் ஆண்டு அரசு விதித்த விதிமுறைகளைச் சுட்டிக்காட்டும் டாக்டர் மினி, “தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போடுவது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு". இது நாய்களின் நடத்தையையும் அமைதிப்படுத்தும்.
அன்று "டெல்லி அரசு இந்தத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியிருந்தால், இன்று தெருக்களில் இவ்வளவு நாய்கள் இருக்காது” என்று குற்றஞ்சாட்டுகிறார்.
“வீண் நேரமும், பொது மக்களின் பணமும், முயற்சியும் இந்தப் பயனற்ற அகற்றல் திட்டத்தில் செலவழிக்கப்படுவதற்கு பதிலாக, திறம்பட கருத்தடைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அதோடு, சட்டவிரோதமாக இயங்கும் செல்லப்பிராணி கடைகளையும், இனப்பெருக்க வளர்ப்பாளர்களையும் மூட வேண்டும்.
இவை தான் நாய்கள் கைவிடப்படுவதற்கு முக்கியக் காரணம். மக்களை ஊக்குவித்து, புகலிடங்களிலிருந்தோ, தெருவிலிருந்தோ நாய்களைத் தத்தெடுக்க வைக்க வேண்டும்” என்று பீட்டா தனது அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.
நாய்க்கடி சம்பவங்கள் “மிகவும் மோசமானவை” என்று கருதிய நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.
“இது பொது மக்களின் நலனுக்காகச் செய்யப்படுகிறது. இதில் எந்த உணர்ச்சிப் பூர்வமான அணுகுமுறையும் இருக்கக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி பர்திவாலா தெளிவாகச் சொல்லிவிட்டார்.
“எல்லா இடங்களிலிருந்தும் நாய்களைப் பிடித்து, புகலிடங்களுக்கு மாற்றுங்கள்". என்றார்.
இதன்படி, டெல்லி அரசு ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் குறைந்தபட்சம் 5,000 நாய்களைத் தங்கவைக்கும் வகையில் புகலிடங்களை உருவாக்க வேண்டும்.
இந்தப் புகலிடங்களில் கருத்தடை, தடுப்பூசி போடுவதற்கு போதுமான ஊழியர்கள் இருக்க வேண்டும். நாய்கள் வெளியே விடப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இந்தப் புகலிடங்களை விரிவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
முடிவு எங்கே?
தெருநாய்கள் பிரச்னைக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும், பீட்டாவின் எதிர்ப்பும் ஒரு பக்கம் இருக்க, இந்த விவகாரம் எந்தத் திசையில் செல்லப்போகிறது?
மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், விலங்குகளின் நலனையும் புறக்கணிக்க முடியாது.
விலங்கு உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, உச்ச நீதிமன்றத்தின் தெருநாய்கள் அகற்றல் உத்தரவை “நடைமுறைக்கு ஒவ்வாதது, நிதி ரீதியாக சாத்தியமற்றது, பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு பாதகமானது” எனக் கடுமையாக விமர்சித்தார்.
இந்தப் பணியின் அளவு மிகப்பெரியது என்பதால் இது “சாத்தியமற்றது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“டெல்லியில் மூன்று லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றைத் தெருக்களிலிருந்து அகற்ற, ஒவ்வொரு புகலிடத்திலும் வடிகால், குடிநீர், கூரை, சமையலறை, காவலர் வசதிகளுடன் 3,000 பவுண்டுகள் உருவாக்க வேண்டும்.
இதற்கு சுமார் 15,000 கோடி ரூபாய் செலவாகும். டெல்லியிடம் இத்தகைய பெருந்தொகை உள்ளதா?” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த மோதலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? கருத்தடைத் திட்டமும், மக்கள் விழிப்புணர்வும் தான் இதற்கு மருந்தாக இருக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!