

இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 6 முறை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் உயரும் என்றே சொல்லப்பட்டு வந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக குறைந்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தை, பொருளாதாரம், உலகளாவிய போர் மற்றும் பங்குச்சந்தை ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகியவற்றைப் பொறுத்து பொறுத்து, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினசரி மாற்றி அமைக்கப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, கடந்த இரண்டு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் தினசரி மாற்றி அமைக்கப்படுமா என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதற்கேற்பவே கடந்த இரண்டு வாரமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வந்தது.
கடந்த இரண்டு வாரத்தில் ஆறு முறை ஏறிய பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று குறைந்துள்ளது.
நேற்று (மே 27) ரூ.108.20-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், 43 பைசா குறைந்து இன்று ரூ.107.77-க்கு விற்பனையாகிறது.
அதேபோல் ரூ.99.95-க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், 40 பைசா குறைந்து இன்று ரூ.99.55-க்கு விற்பனையாகிறது.
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ள நிலையில், மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வராத வரையில் பெட்ரோல், டீசல் விலை நிரந்தரத் தன்மை இருக்காது என்றே தெரிகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மட்டுமின்றி சிஎன்ஜி விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.95-க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் சிஎன்ஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிஎன்ஜி-யில் இயங்கும் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சிஎன்ஜி நிரப்புவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும், தற்போது வரை தட்டுப்பாடு இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி-யின் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, சிஎன்ஜி கிடைப்பதில் தட்டுப்பாடும் இருப்பதால் ஆட்டோ ஓட்டுநர்களின் தினசரி வருமானம் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பலமணி நேரம் காத்திருந்து சிஎன்ஜி நிரப்புவதால், ஆட்டோ ஓட்டும் நேரம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.