பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று எத்தியோப்பியா சென்றடைந்தார். இரண்டு நாள் பயணமாக அங்கு சென்ற அவருக்கு, அந்நாட்டுப் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்திற்கே வந்து உற்சாக வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
பயணத்தின் முக்கிய நிகழ்வாக, எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான "தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா" (The Great Honor Nishan of Ethiopia) பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது இந்த விருதை மோடிக்கு அணிவித்து கௌரவித்தார். இந்த உயரிய விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி இதன் மூலம் பெற்றுள்ளார். இது அவருக்கு வெளிநாடுகளில் வழங்கப்பட்ட 28-வது உயரிய விருதாகும்.
விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, "உலகின் மிகத் தொன்மையான மற்றும் செழிப்பான நாகரிகம் கொண்ட நாட்டின் இந்த விருதைப் பெறுவது பெருமைக்குரிய விஷயம். இதனை 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், இந்த அங்கீகாரம் இருதரப்பு உறவை வலுப்படுத்த உழைத்த இந்தியர்களையே சாரும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் திறன் கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் பயிலும் எத்தியோப்பிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை (Scholarships) இரட்டிப்பாக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.