

ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வீரசபதம் ஏற்போம்" என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, ஓ. பன்னீர்செல்வம் (OPS) அவர்கள் வழக்கத்திற்கு மாறாக சென்னைக்கு வந்து அஞ்சலி செலுத்தாமல், தான் இருக்கும் இடத்திலேயே ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் (அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும்). ஆனால், இம்முறை அவர் சென்னையில் அஞ்சலி செலுத்தாதது அவரது அரசியல் நகர்வில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில், பதிவு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.
அவரைப் பற்றி இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் தான் என்ன கூறினாரோ அது இங்கு இடம் பெற்றுள்ளதாக தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தன்னுடைய எக்ஸ் பதிவில், ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள் செலுத்தியுள்ளார்.
ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்.
பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் என தெரிவித்துள்ளார்.