
2 நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்வழி வெற்றி மற்றும் அவர் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நினைவு விழா, ஆடித்திருவாதிரை திருநாள் ஆகிய முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.
ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை அணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, சோழ வம்சத்தை இந்திய வரலாற்றின் பொற்காலங்களில் ஒன்றாகப் பாராட்டினார். அவர்களின் பாரம்பரியத்தை தனது அரசாங்கத்தின் 'விட்சித் பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இணைத்து, ‘ராஜராஜனும் ராஜேந்திரனும் இந்தியாவின் சின்னங்கள் மற்றும் அதன் மரபு மற்றும் வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்’ என்றும் கூறினார். மேலும் சோழர்கள் இந்தியாவில் ஜனநாயக மரபுகளுக்கு அடித்தளமிட்டனர் என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பெருமையை போற்றும் விதமாக கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டுமான தொடக்கம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் பயணத்தின் 1000 ஆண்டுகள் நினைவை பிரதிபலிக்கும் வகையில், ரூ.1,000 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த நாணயம், 99.9 சதவீதம் வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாணயம் 40 கிராம் எடையும், 44 மி.மீட்டர் விட்டமும் கொண்டதாக உள்ளது.
நாணயத்தின் முன்பக்கத்தில் சிங்கமுகம் கொண்ட அசோக தூண்கள் இடம் பெற்றுள்ளன. அதன் கீழே, ‘வாய்மையே வெல்லும்' என்று தேவநாகரி எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடதுபுறம் தேவநாகரி எழுத்தில் பாரதம் என்றும், வலது புறத்தில் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், ‘₹' என்ற ரூபாய் குறியீட்டுடன் 1000 என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் பின் பக்கத்தின் நடுவே, ராஜேந்திர சோழனின் கடற்படை பயணத்தை குறிக்கும் வகையில் அவரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தை சுற்றி, முதலாம் ராஜேந்திர சோழனின் கடல்சார் பயணத்தின் 1,000-வது ஆண்டு நினைவு என தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2025 என்று நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கும், அவருடைய மைந்தனும், மகத்தான ஆட்சியாளருமான ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் இந்த உருவச்சிலை நமது வரலாற்று சின்னத்தை எடுத்துக்கூறும் வகையில் இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 25 நிமிட இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
அவர் இசையமைத்த ‘நான் கடவுள்' திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஓம் சிவ ஹோம்' பாடலை அவரது இசைக்குழுவினர் பாடினார்கள். அப்போது மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி கண்களை மூடியபடி மெய் மறந்து இந்த பாடலை கேட்டு ரசித்தார். அப்போது அவரது கைகள் தாளம் போட்டன.
அதனை தொடர்ந்து, சிவபெருமானை போற்றி மாணிக்கவாசகர் இயற்றிய சிவபுராணத்தின் ‘நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’ என்ற பாடலை இளையராஜா பக்தியுடன் உருக்கமாக பாடினார். சிவன் புகழ்பாடும் ஆன்மிக பாடல்களை இளையராஜாவுடன் சேர்ந்து அவரது குழுவினர் பாடி அசத்தினர். அதை பிரதமர் மோடி கைகளை தட்டிக்கொண்டு ரசித்தப்படி இருந்தார். விழாவில் கலந்து கொண்டவர்களும் இளையராஜாவின் பாடல்களை மெய்மறந்து ரசித்து கேட்டனர். இசை நிகழ்ச்சி முடிந்தவுடன், பிரதமர் மோடி எழுந்து நின்று கைத்தட்டி தனது பாராட்டுக்களை இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கு வெளிப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து திருவாசகம் உரைநடை நூலையும், சாகித்ய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும், இளையராஜா இசையில் உருவான பகவத் கீதையின் தமிழ் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.