ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!
சென்னை பூந்தமல்லிக்கும் போரூருக்கும் இடையிலான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது.இதன் தொடக்க விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கிலோமீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கட்டத்துக்கான இந்த திட்டத்தில் முதல் வழித்தடமான பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 10 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் ஏறத்தாழ முற்றிலும் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் தான் அடுத்த மாதம் நடைபெற உள்ள இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும், அவருடன் தமிழக முதல்வரும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தமிழகத்துக்கு வரும் ஜனவரி மாதம் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் பொங்கல் விழா, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அவற்றுடன் மேற்படி மெட்ரோ இரயில் சேவையின் தொடக்க விழாவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ சேவைகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் சென்னையில் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், மேலும் பலர் இந்த புதிய மெட்ரோ இரயில் பணியின் சேவையால் பயன் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
