பொதுவாக தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்க வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகை அடமானத்தின் பேரில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தங்கத்தை தேவைப்படும் நேரங்களில் பணமாகவும் மாற்றி பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், அதன் மதிப்பு எகிறி கொண்டே போகிறது. ஏழை எளிய மக்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரங்களில் உதவுவதற்காகவே வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறை உள்ளது. அதேபோல் தங்க நடைக்கடன் வாங்குவதற்கு ஆவணங்களே, அதிக நடைமுறைகளோ தேவையில்லை என்பதால் தங்க நகைக்கடனை வாங்கவே அதிகளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கம் ரூ.11,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8,000 வரை கடன் வழங்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,000 வரை மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.
தங்கத்தின் விலை ஏறினாலும் கூட்டுறவு வங்கியில் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் பலரும் தனியார் வங்கிகளில் நகை கடன் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்ட கூட்டுறவு வங்கிகள், அதிகரித்து வரும் தங்கத்திற்கு ஈடாக தங்க நகைக்கடன் தொகை அதிகரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. தற்போது 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒரு கிராமிற்கு ரூ.7000 வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் ஒப்புதல் கிடைத்தவுடன் வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்குபவர்கள் லட்சக்கணக்கில் நகைகளை அடகு வைத்தாலும், அதற்கு சரியாக வட்டி கட்டுவதில்லை என்றும், மறுபடியும் மறுபடியும் அதிக தொகைக்கு நகைக்கடன் வாங்குகிறார்களே தவிர வட்டியை கட்டுவதில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை மட்டும் கூட்டுறவு வங்கிகளில் 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய் வரை நகைக் கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகையில் 99 சதவீதம் வாரக்கடன்களாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாரக்கடன் நிலுவையில் உள்ள நிலையில், நகைக்கான கடனை 6000 ரூபாயில் இருந்து 7000 ரூபாயாக அதிகரித்தால் வங்கிகளுக்கு கடன் சுமை இன்னும் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி தங்க நகைகளுக்கான கடன் தொகையை உயர்த்தும் பட்சத்தில், 22 காரட் தங்க நகைகளுக்கு மட்டும் 7000 ரூபாய் நகைக்கடன் கொடுக்க முடியும். அதுவே, 18 காரட் தங்க நகைகளுக்கு 7000 ரூபாய் கொடுக்க முடியாது, அப்படியே கொடுத்தாலும் வங்கிகளுக்கு நஷ்டம் மட்டுமே ஏற்படும் என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே இதற்கு முறையான விதிமுறைகளை வகுக்காதவரை தங்க நகைக்கடன் தொகையை 7000 ரூபாயாக மாற்றுவது சாத்தியம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் ரிசர்வ் வங்கியின் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி கனரா வங்கி, இந்தியன் வங்கி போன்ற வங்கிகளில், கடன் காலத்தில் வட்டியுடன் அசலையும் சேர்த்துச் செலுத்த வேண்டும் அல்லது நகையை வட்டியுடன் சேர்த்து முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும். வட்டி மட்டும் செலுத்தி நகையை மறு அடகு வைக்க அனுமதிக்கப்படுவதில்லை.
அதேநேரம் கூட்டுறவு வங்கிகளில் வட்டி மட்டும் செலுத்தி நகையை மறு அடகு வைக்க அனுமதிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இன்னும் கூட்டுறவு வங்கிகளுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்படும் நகைக்கடன்கள் தேர்தல் சமயங்களில் தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் இங்கு நகைக்கடன் வாங்கவே விரும்புகின்றனர். ஏனெனில் 2026-ம் தமிழக தேர்தல் வரவுள்ளதால் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதால் மக்கள் பலரும் லட்சக்கணக்கில் தங்க நகை மீது கடன் வாங்குகிறார்களே தவிர வட்டியை கட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த தேர்தல் சமயத்தில், 5 சவரனுக்குட்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.