

அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதிலும் குறிப்பாக, கடந்த 1947ம் ஆண்டு பாகிஸ்தான் அத்துமீறி காஷ்மீரின் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது. அதுமுதல் அவ்விடத்தை 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' எனக் குறிப்பிடுவார்கள். தற்போது இந்தப் பகுதியில் தான் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், தற்போது இது உச்சத்தை அடைந்துள்ளது.
விலை உயர்வு, அதிக வரி, மின்வெட்டு போன்றவற்றிற்கு எதிராக மக்கள் முசாஃபராபாத்தில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். இதனால், பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். பல இடங்களில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுகளும் நடத்தினர்.
அந்தப் பகுதியில் உள்ள மங்களா அணையில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு வரி விதிக்கக்கூடாது என்றும், கோதுமை மாவுக்கு மானியம் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். அதனால், இரவோடு இரவாக அந்தப் பகுதியில் வாழும் முக்கிய தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால், கோபமடைந்த மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முசாஃப்ராபாத்திற்கு பேரணியாக செல்ல பொதுமக்கள் திட்டமிட்டனர். அப்படி செல்லும்போதுதான் போலீஸார் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். மேலும் போலீஸார் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான ஒரு பொருளாதார சிக்கலில் மாட்டி இருக்கிறது. சர்வதேச அமைப்புகள் 3 பில்லியன் டாலர் கொடுத்து உதவி செய்த போதிலும் நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை. அதேநேரம் சில கட்டுப்பாடுகளால் மின்சாரம் தொடங்கிப் பல கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால் அங்குப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் போலீஸார் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்ததோடு 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இணைய சேவை அந்தப் பகுதியில் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here