

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் (Ration Card Holders) குறைகளைத் தீர்க்கும் வகையில், மாதந்தோறும் வட்ட வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையிலுள்ள 19 மண்டலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் இன்று நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று (மார்ச் 14ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் மக்கள் என்னென்ன சேவைகளைப் பெறலாம்?
குடும்ப அட்டைதாரர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டை தொடர்பாக பின்வரும் மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும்.
* இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தித் தரப்படும்.
* மேலும், இந்த முகாமில் ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு, மற்றொரு நபரை அங்கீகரிப்பதற்கான அங்கீகாரச் சான்று இம்முகாமில் வழங்கப்படும்.
* ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரம் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் உள்ள அந்தந்த வட்ட அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் இன்று நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் பயன்படுத்தி தங்கள் குடும்ப அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* ராணிப்பேட்டையில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது.
* உடுமலை தாலுகாவில் பள்ளப்பாளையம் கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடக்கிறது.
* திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாவிலும் நடைபெற உள்ளன. முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உள்ளனர்.
* பல்லடம் தாலுகாவில் சித்தம்பலம் கிராமத்துக்கு அங்குள்ள ஊராட்சி அலுவலகத்திலும், அவிநாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு மொய்யாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடைபெற உள்ளது.
* தாராபுரம் தாலுகாவில் தேர்பட்டி கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் காங்கயம் கிராமத்துக்கும் அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கிறது. அதே போல், மடத்துக்குளம் தாலுகாவில் காரத்தொழுவு கிராமத்துக்கும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் போயம்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் வேலம்பட்டி கிராமத்துக்கும் முகாம் நடக்கிறது.
- முகாமில் பொதுமக்கள் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் கார்டு பெற மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.