

பொதுமக்களுக்கு கூட்டுறவுத் துறையின் மூலம் ரேஷன் கடைகள் வாயிலாக, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தற்போதைய நிலவரப்படி சுமார் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் கார்டு கிடைக்காதவர்கள், தங்களது விண்ணப்ப நிலையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் மிக எளிதாக அறிந்து கொள்ளும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
முன்பெல்லாம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஓரிரு மாதங்களிலே கிடைத்து விடும். ஆனால் தற்போது புதிய ரேஷன் கார்டு கிடைக்க பல மாதங்கள் வரை ஆகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்பெற ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகமான பிறகு, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஆகையால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை தமிழக அரசு சில மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. அதன் பிறகு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் விண்ணப்ப நிலையைச் சரிபார்த்தல்:
1. முதலில் தமிழக அரசின் www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் இருக்கும் ‘மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது நீங்கள் விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட குறிப்பு எண்ணை உள்ளிடவும். எண்ணைப் பதிவிட்டு சமர்ப்பித்ததும், திரையில் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்ற விவரம் தோன்றும்.
4. உங்கள் விண்ணப்பம் சரிபார்ப்பில் உள்ளதா அல்லது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பது இங்கே தெரிந்து விடும்.
மொபைல் ஆப் (TNPDS App) மூலம் சரிபார்ப்பது எப்படி?
1. உங்களிடம் TNPDS மொபைல் செயலி இருந்தால், அதிலும் ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையைச் சரிபார்க்கலாம்.
2. செயலியில் ‘மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை’ என்பதைத் தேர்வு செய்யவும். இப்போது குறிப்பு எண்ணை உள்ளிட்டால், விண்ணப்ப நிலை தெரிந்து விடும்.
இ-சேவை மையத்தில் சரிபார்த்தல்:
1. இ-சேவை மையத்திற்கு நேரில் சென்று ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையைச் சரிபார்க்கலாம் அல்லது திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
2. ஆன்லைனில் நீங்களே செய்வதை விடவும், இது சற்று கூடுதல் வசதியானது. ஏனெனில் அங்குள்ள ஊழியர்கள் உங்களுக்குத் தேவையான ஆவணங்களைச் சரியாகப் பதிவேற்ற உதவுவார்கள்.
3. இ-சேவை மைய ஊழியர்களிடம் உங்களின் குறிப்பு எண்ணை தெரிவித்தால், ஆன்லைனில் சரிபார்த்து விண்ணப்ப நிலையை உடனே சொல்லி விடுவார்கள்.
4. ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருத்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும்; கேஸ் இணைப்பு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எவை என்பது குறித்த ஆலோசனைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
5. இ-சேவை மைய ஆலோசனையைத் தொடர்ந்து, நீங்கள் மீண்டும் அங்கேயே விண்ணப்பிக்கலாம்.
வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று சரிபார்த்தல்:
1. ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை உங்கள் பகுதிக்குரிய வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் சரிபார்க்கலாம்.
2. விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், வட்ட வழங்கல் அலுவலகத்திலேயே அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அஞ்சல் துறை மூலமாக உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தமிழக அரசின் கட்டணமில்லா உதவி எண் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.