

அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பிற்குப் பிறகு,15 நாட்களுக்குப் பின் புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார் ஈபிஎஸ் நியமித்த புதிய மாவட்ட செயலாளர். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சாவியை ஒப்படைத்த நிலையில் தற்போது புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல் அலுவலகத்திற்கு சென்றார்.
தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் சி. விஜயபாஸ்கரின் மாவட்டச் செயலாளர் பொறுப்பை பறித்தார் இபிஎஸ். அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி பூசல் விவகாரம் காரணமாக, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தின் கட்டுப்பாட்டை சுற்றிய சர்ச்சைகள் சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பழனிவேலை அலுவலகத்திற்குள் செல்ல சி.விஜயபாஸ்கர் தரப்பு அனுமதிக்காமல் இருந்தது.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தின் சாவியை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்காததால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, விவகாரம் தீவிரமடைந்தது. இந்நிலைமையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமரச முயற்சிகளை மேற்கொண்டது. புதுக்கோட்டை கோட்டாட்சியர் பிரகாஷ் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட கழக அலுவலகத்தின் சாவியை புதிய மாவட்டச் செயலாளர் பழனிவேலிடம் ஒப்படைத்தனர்.