ராகுல் காந்திக்கு அரசியல் முதிர்ச்சி போதாது: முன்பே கணித்த பிரணாப் முகர்ஜி!

Pranab Mukherjee and Rahul Gandhi
Pranab Mukherjee and Rahul Gandhi

“ராகுல் காந்தி மிகவும் கண்ணியமானவர், கேள்விகள் நிறைந்தவர். ஆனால், அரசியல் ரீதியில் போதிய முதிர்ச்சி இல்லாதவர்” என்று பிராணாப் முகர்ஜி தம்மிடம் கூறியதாக, அவரது மகள் ஷர்மிஷ்டா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஒருவருமான பிரணாப் முகர்ஜி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், அவர் தம்மிடம் தனிப்பட்ட முறையில் கூறிய சில விஷயங்களையும் ஒரு புத்தகம் எழுதி வருகிறார்.

இன்னும் வெளிவராத அந்த புத்தகத்தில், 2004 இல் தம்மை சோனியா காந்தி பிரதமாக நியமிக்கமாட்டார் என்பதை பிரணாப் நிச்சயமாக அறிந்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“பிரணாப் முகர்ஜி பற்றிய எனது நினைவலைகள்” என்று அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகள் மற்றும் ஷர்மிஷ்டாவில் கூறிய விஷயங்களை உள்ளடக்கியது இந்த புத்தகம்.

“ராகுல் காந்தியிடம், மத்திய அமைச்சரவையில் சேர்ந்து நிர்வாக அனுபவத்தை பெறுமாறு அறிவுரை கூறினேன். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. ராகுல்காந்திக்கு பல துறைகளில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு துறையையும் அவர் வெகுசீக்கிரம் கடந்து விடுகிறார். அவர் எதை கற்றுக்கொண்டார், எதைப் புரிந்துகொண்டார் என்பது எனக்குத் தெரியவில்லை” என்று பிரணாப் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஒரு நாள், “ உங்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா என்று தந்தையிடம் நான் கேட்டேன். அவர் ஒருபோதும் ஆசைப்படவில்லை என்பது அவரது பதிலிலிருந்து புரிந்துகொண்டேன்.

2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணி கட்சிகள் சோனியா பிரதமராக வேண்டும் என்று விரும்பின. அப்போது அவர்தான் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் அவர் பின்வாங்கினார். அப்போது யார் பிரதமர் என ஊகங்கள் எழுந்தன.

இதையும் படியுங்கள்:
காங்கிரசுக்கு உமர் அப்துல்லா கூறிய அறிவுரை!
Pranab Mukherjee and Rahul Gandhi

அப்போதுதான் முனைவர் மன்மோகன்சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரின் பெயரும் கட்சி மேலிடத்தில் விவாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில் இரண்டு நாட்கள் அப்பாவை என்னால் சந்திக்க முடியவில்லை. ஏனெனில் அவர் மிகவும் பிஸியாக இருந்தார். பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் நீங்கள் பிரதமராகப் போகிறீர்களா? என்று ஒருவித பூரிப்புடன் கேட்டேன். ஆனால், அவரது பதில் எனக்கு அதிர்ச்சி அளித்தது.

“இல்லை, சோனியாகாந்தி என்னை நிச்சயம் பிரதமராக தேர்வு செய்யமாட்டார். டாக்டர் மன்மோகன் சிங்தான் பிரதமராகப் போகிறார். அதையும் சோனியா விரைவில் அறிவிக்க வேண்டும். ஏனெனில் யார் பிரதமர் என்பதை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமற்றத்தன்மை நீடிக்கக்கூடாது” என்று கூறியதாக ஷர்மிஷ்டா அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

2004 இல் பிரதமர் ஆக முடியவில்லை என்றதும் பிரணாப் சோர்ந்துபோய், அதிருப்தி அடைந்தாரா? என்று கேட்டதற்கு, “எதிர்பார்ப்பு இருந்தால் தானே, ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அவருக்கு எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றமும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com