

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ம்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால் ஆட்சி அமைப்பற்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் ஆளாக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டியது. அதனை தொடர்ந்து 2 நாட்கள் இழுப்பறிக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவளித்த நிலையில் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்தது.
அதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ்ப்புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். கடந்த மாதம் தமிழ்ப்புத்தாண்டு அன்று வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் அடுத்த ஓராண்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள் குறித்து முன்கணிப்புகள் வாசிக்கப்பட்டது.
அந்த பஞ்சாங்கத்தில் பல கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க நேரும். மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இதனால் பல சரிவுகளை சந்திக்க வேண்டி வரும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் கூறியது போலவே தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைந்துள்ளது. இது அரசியலில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அதேபோலவே மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதை போலவே, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிமுகவில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
மேலும் பழனிச்சாமிக்கு எதிரான மனநிலையில் இருக்கக்கூடிய எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தங்களின் ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டி தவெகவிற்கு ஆதரவு வழங்க முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக இரு கோஷ்டியாக பிளந்திருப்பது இந்த செயல்பாடுகளால் தெரியவந்துள்ளது.