

நம் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ரேஷன் கார்டு மூலம் இலவசமாக அல்லது குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு ஆவணம் ஆகும். ரேஷன் கார்டை வைத்து அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசின் மற்ற திட்டங்கள் மூலமாகவும் உதவி கிடைக்கிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு போன்ற பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன.
ரேஷன் கார்டைப் பயன்படுத்தும் மக்களுக்கு அவ்வப்போது பல வகையான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல ரேஷன் கார்டு தொடர்பான பல விதிமுறைகளை அரசு மாற்றுகிறது.
அத்தகைய சூழ்நிலையில்,ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அது தொடர்பான விதிமுறைகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் தங்கள் ரேஷன் கார்டுகளுக்கான KYC செயல்முறையை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.மேலும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் KYC சரிபார்ப்பை சரியான காலக்கெடுவிற்குள் முடிக்கத் தவறினால், அவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்பதுடன், ரேஷன் கார்டு மூலம் பெறும் சலுகைகளைப் பெற முடியாமல் போகும்.அதுமட்டுமின்றி, ரேஷன் கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்கு கூடுதல் ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் தேவைப்படும்.
ரேஷன் கார்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் KYC சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. KYC சரிபார்ப்பு என்பது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறையாகும். KYC சரிபார்ப்பை முடிக்க ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் நம்பர், கைரேகை சரிபார்ப்பு ஆகியவை அவசியம்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் அடையாளத்தை சரிபார்த்து போலி ரேஷன் கார்டுகளை அகற்றுவதே கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பதற்கான காரணம் ஆகும்.
பலர் இந்த தேதி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்தாலும், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அரசாங்கம் தெளிவாக கூறியுள்ளது. மோசடிகளை தவிர்க்க KYC முக்கியம் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடைய ஒடிசா மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் தங்கள் ரேஷன் கார்டுகளுக்கான KYC செயல்முறையை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிக்க அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.