

செப்டம்பர் 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கட்ராமன் அறிவித்துள்ளார்.
அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் வெங்காயம் வரத்து குறைவு காரணமாக வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. எனவே ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்றும், ரேஷன் கடை, பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார். முதல் கட்டமாக நகர்ப்புறங்களில் 8,000 கடைகள் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியவசிய பொருட்களான காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிக அளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக வெங்காயம் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாசிக் நகரத்திலிருந்து தமிழகத்திற்கு "கந்தா எக்ஸ்பிரஸ்" மூலம் 21 சரக்கு ரயில் பெட்டிகளில் 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வெங்காயக் கையிருப்பை மாநில அரசு பெற்று பசுமைப் பண்ணை கூட்டுறவு அங்காடிகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நியாய விலைக் கடைகள் வழியாக பொது மக்களுக்கு மாநில மானிய விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சந்தையில் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படும் வெங்காய விலையிலிருந்து மக்களுக்கு கிலோவுக்கு 30 ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும். நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோதுமை மாவு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை:
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு கிலோ ₹ 15 க்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வெளிச்சந்தையில் கோதுமை மாவு விலை சராசரியாக 60 ரூபாய் வரை உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தத் தான் இத்திட்டம் உருவாகி உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் கிலோ 27.50 ரூபாய்க்கு கோதுமை மாவு விற்கும் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தில் தமிழகத்தில் முக்கிய இடங்களில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் கோதுமை மாவு விற்கப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், பொது விநியோகத் திட்டத்தில் பாக்கெட்டில் கோதுமை வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோதுமை மாவு கிலோ 15 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசிடம் இருந்து கோதுமையை வாங்கி, ஆலைகளில் மாவாக அரைத்து பாக்கெட்டில் வழங்கப்பட உள்ளது.