
வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரிடமும் ஏ.டி.எம். கார்டு இருக்கும். இந்த ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி மக்கள் தங்களுக்கு தேவையான போது ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுத்து வந்தனர். ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அவசர தேவைகளுக்காக பணம் எடுத்து செலவழித்து வரும் நிலை ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினரிடமும் தான் அதிகமாக இருக்கிறது. பணத்தேவைக்கு ஒவ்வொரு முறையும் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க முடியாதவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருந்தது. அதுமட்டுமின்றி எங்காவது வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் போது கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமின்றி அதிக பணத்தை கையில் வைத்திருந்தால் திருடு போய் விடும் என்ற பயமும் இல்லை.
இந்நிலையில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கும் சில வரைமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்.களில் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், பிற இடங்களில் உள்ள வங்கிகளில் 5 முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இதற்கான சேவைக் கட்டணம் திருத்தப்பட்டு, தற்போது புதிய கட்டண உயர்வு அமலுக்கு வர இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 5 முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்கு, ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை மாற்றி மே 1-ம்தேதி முதல் ரூ.23 வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களில், அதாவது குறிப்பிட்ட இலவச பரிவர்த்தனைக்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.21 சேவை கட்டணத்துக்கு பதிலாக ரூ.23 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது வருகிற மே 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை நேரடியாக வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கும் சிரமத்தை தவிர்க்கவும், வாடிக்கையாளர் வசதிக்காக ஏற்படுத்தியது தான் ஏ.டி.எம் மையம். வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவேண்டிய வங்கிகள் எஸ்.எம்.எஸ். கட்டணம், கணக்கு பரிவர்த்தனை கட்டணம், பராமரிப்பு கட்டணம் என பல்வேறு கட்டணங்களை கூறி பொதுமக்களிடம் இருந்து பலவகையில் கட்டணம் வசூலிக்கிறது. இது போதாதென்று தற்போது ஏ.டி.எம்.மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருப்பது ஏழை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் இந்தியா எனக்கூறி பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றிவிட்டு, இப்போது அதற்கு கட்டணம், இதற்கு கட்டணம் என வசூலிப்பது என்ன நியாயம்? இது அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு தான் மிகவும் கஷ்டத்தை கொடுக்கும். ஜி பே போன்ற டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்ய தெரியாத பெரும்பாலான ஏழை மக்கள் ஏ.டி.எம். மையத்திற்கு தான் செல்கின்றனர். 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.23 வரை வசூலிப்பது ஏழை மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதனால் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை செய்யவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்படும்.
ஏற்கனவே அத்தியாவச பொருட்களின் விலைவாசி உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் அவதிபட்டு வரும் ஏழை எளிய மக்கள் தற்போது வங்கிகளும் பணம் வசூலிப்பது அவர்களை இன்னும் அவதிக்குள்ளாகும். சாதாரண மக்கள் இந்த நடவடிக்கையால் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
ஆரம்பத்தில் மத்திய அரசு அனைத்து வங்கி சேவையும் இலவசமாக வழங்கியதன் காரணமாக மக்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நன்றாக பழக்கப்பட்டார்கள். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஏடிஎம் கார்டை பயன்படுத்துவதற்கு கட்டணம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது ஏழை எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் 23 ரூபாய் என்பது ஏழைகளுக்கு மிகப்பெரிய தொகையாகும், ஆனால் வசதிபடைத்தவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமல்ல.