சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காதது ஏன்..? ஆளுநர் மாளிகை விளக்கம்..!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.இதில் உரையாற்றுவதற்காக காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிக்க இருந்தார். அத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவடைய இருந்தது.அதன்பின் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட இருந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

2026ன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவரை நேரலை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆளுனர் உரையாற்றாமல் சட்டமன்றத்தைவிட்டு வெளியேறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்க வேண்டிய நிலையில் வழக்கப்படி உரையாற்றமலேயே வெளியேறி உள்ளது பேசு பொருளாகி உள்ளது.இதற்கு தமிழக முதல்வர் தன் அதிர்ச்சியையும்,ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வரும்நிலையில் இந்த முறையும் அவரது உரை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் எதிர்கட்சியான அ.தி.மு.க.மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையை முன்னிறுத்தி வெளிநடப்பு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் தடையின்றி பேச அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அரசின் தயாரிக்கப்பட்ட உரையில் பல ஆதாரமற்ற மற்றும் வழிதவற வைக்கும் கூற்றுகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்சினைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

  • மாநிலம் ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறப்படுவது உண்மையிலிருந்து வெகுவாக விலகியுள்ளது. முதலீட்டாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) ஆவணங்களாக மட்டுமே உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதியே. முதலீட்டு தரவுகள், தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்குப் போதிய ஈர்ப்பை இழந்து வருவதை காட்டுகின்றன.

  • நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் மாநிலங்களுக்குள் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இன்று ஆறாவது இடத்தைக் கூட தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழுக்கள் இல்லாமல் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. கோவில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

  • பண்டைய கோவில்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள் ஐந்து ஆண்டுகளாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அக்கறையின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பல்வேறு துறைகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அவர்கள் தீர்க்கப்படாத நியாயமான கோரிக்கைகளால் விரக்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் உரையில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

  • மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு, அதனை மதிக்க வேண்டிய அடிப்படை அரசியலமைப்புக் கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும், போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

  • போதைப்பொருள் காரணமாக ஓராண்டில் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், வருங்கால முதலீட்டாளர்கள் உடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், காகித அளவிலேயே உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  • பட்டியலின மக்களுக்கு எதிரான அட்டூழியங்களும், பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்று தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது; இது அரசாங்கத்திற்கு கவலையளிப்பதாக தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ரயில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் கல்வி தரம் தொடர்ந்து சரிந்து வருவதுடன், கல்வி நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்படுவது குறித்து அரசின் அறிக்கையில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com