

இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் நியூசிலாந்தை இந்தியா வென்றதில்லை என்ற கூற்றை உடைத்து, 2026 மார்ச் 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்தது.
இதன் மூலம் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கிண்ணத்தை வென்ற ஒரே அணி , மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது.அதோடு இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பல உலக சாதனைகளை படைத்திருக்கிறது.அவற்றைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் செமி ஃபைனல் மற்றும் பைனல் இரண்டிலும் 250 ரன்களுக்கு மேல் எடுத்து வென்ற ஒரே அணி இந்தியா தான்.2026 மார்ச் 5ம் தேதி நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்து வென்றது.இறுதிப் போட்டியில் மார்ச் 8 ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக 255 ரன்கள் எடுத்து வென்றது.
டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் ஒரு அணியின் மூன்று வீரர்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வெற்றி பெற்ற ஒரே அணியும் இந்திய அணி தான்.இந்த டி20 இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் நியூசிலாந்து பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என விளாசி 89 ரன்கள் எடுத்தார். அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்து அசத்தினார்.மூன்றாவது வீரராக களம் இறங்கிய இஷான் கிஷனும் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பினார். அவரும் பவுண்டரி, சிக்சர் என பறக்க விட 25 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்தார்.
டி20 உலக கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியும் இந்திய அணி தான். நியூசிலாந்திற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் குவித்தது. இது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதோடு நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இதற்கு முன்பு 2012 டி 20 உலகக் கோப்பையில் அரை இறுதியில் விளையாடிய மேற்கத்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதது தான் சாதனையாக இருந்தது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி நியூசிலாந்து பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தது. இந்த கட்டத்தில் நியூசிலாந்து அணி பந்துகளை மெதுவாக வீச அதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திய இந்திய அணி வீரர்கள் அடித்து நொறுக்கினர். பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ஓட்டங்கள் சேர்த்தது.சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ஓட்டங்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.இதில் எட்டு சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்ற பெருமையை அவர் பெற்றார்.
2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் நடந்த சூப்பர் 8ல் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தது.இதுவே டி 20 உலகக் கோப்பை போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இது நடந்தது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்.அந்த மைதானத்தில் சர்வதேச டி 20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவே.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 2 ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் பயிற்சியாளர் என்ற சாதனையை கவுதம் கம்பீர் படைத்துள்ளார். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கம்பீர் கைப்பற்றிய சூழலில், தற்போது சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளார்.