

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழு ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த அறிவிப்பு நடுத்தர வசதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ரெப்போ வட்டி என்பது இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு குறுகிய காலத்திற்கு அரசு பத்திரங்களை அடமானமாக வைத்து வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அளவு பணப்புழக்கத்தை பராமரிப்பது வங்கி அமைப்பில் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வது ஆகியவை ரெப்போ வங்கி வட்டி விகிதத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மேலும் 2026-27 நிதியாண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும். முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது 6 உறுப்பினர்கள் கொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee – MPC) ஆகும். இந்தக் குழுவின் 3 பேர் RBI ஆளுநர் உட்பட RBI-யிலிருந்தும் , 3 பேரை மத்திய அரசு நியமிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு குறைந்தது 4 முறை (நடைமுறையில் பொதுவாக 6 முறை) MPC கூட்டம் நடைபெற்று வட்டி விகிதம் கணிக்கப்படுகிறநு.
நாட்டின் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, சந்தை நிலவரம், உலகளாவிய பொருளாதார சூழல் போன்றவற்றை ஆய்வு செய்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தலாமா, குறைக்கலாமா அல்லது மாற்றமின்றி வைத்திருக்கலாமா என்பதை வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்கிறது.
வாக்குகள் சமமாக இருந்தால், RBI ஆளுநரின் முடிவு (casting vote) இறுதியானதாக இருக்கும். தற்போது கவர்னர் அறிவித்துள்ளது இதன் அடிப்படையில் என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய புவிசார் பதற்றங்கள் மற்றும் பருவமழை தொடர்பான நிச்சயமற்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற நிலை தொடர்வதாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாலும்
இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருப்பதால், தற்போதைக்கு வட்டியை உயர்த்தவோ குறைக்கவோ தேவையில்லை என்று RBI கருதியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட மிதக்கும் (floating rate) வட்டி கடன்களின் EMI-யில் உடனடி மாற்றம் இருக்காது. வங்கி கடன் மற்றும் வைப்பு வட்டி விகிதங்களிலும் பெரிய மாற்றம் உடனடியாக ஏற்பட வாய்ப்பு குறைவு என்பதால் இது மக்களுக்கு மகிழ்ச்சி தரும்.
ரெப்போ வட்டி அதிகரித்தால் உண்டாகும் பாதிப்புகள்
ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Rate) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகரித்தால், அதன் தாக்கம் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பல வகையில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
முக்கிய பாதிப்புகளாக வீடு, கார், தனிநபர் கடன்களின் EMI தவணைத் தொகை உயரும் வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் வங்கிகள் RBI-யிடமிருந்து அதிக வட்டியில் கடன் பெறுவதால், வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டியையும் உயர்த்தும். இதனால் மாதாந்திர EMI அதிகரிக்கும். அதிக வட்டி காரணமாக மக்கள் மற்றும் நிறுவனங்கள் புதிய கடன்கள் எடுப்பதைத் தவிர்க்கலாம். வங்கிகள் வைப்புகளை ஈர்க்க நிலையான வைப்புகளுக்கான (Fixed Deposit) வட்டியை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
கடன் வாங்குவது விலையுயர்வதால் மக்கள் செலவுகளை குறைப்பார்கள். இதனால் சந்தையில் பணப்புழக்கம் குறையும்..மக்கள் செலவு குறைவதால் பொருட்களின் தேவை குறையும். இதன் மூலம் விலை உயர்வை (Inflation) கட்டுப்படுத்த RBI முயற்சிக்கும்.
தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமாகலாம்: நிறுவனங்கள் முதலீட்டை குறைக்கலாம். இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கமும் பொருளாதார வளர்ச்சியும் தற்காலிகமாக மந்தமடைய வாய்ப்பு உள்ளது.
சிறு உதாரணமாக ஒருவரின் வீட்டுக் கடன் EMI தற்போது ₹25,000 என்றால், ரெப்போ வட்டி உயர்ந்த பிறகு அது ₹26,000 அல்லது அதற்கு மேல் கடன் தொகை, காலம் மற்றும் வங்கியின் வட்டி மாற்றத்தைப் பொறுத்து உயரக்கூடும்.
மேலும் ரெப்போ வட்டி மாறும்போது வங்கிகள் தங்களின் கடன் மற்றும் வைப்புத் தொகை வட்டிகளை அதற்கு ஏற்ப மாற்றுவது வழக்கம் என்றும் ஆனால் அனைத்து வங்கிகளும் ஒரே அளவில் ஒரே நேரத்தில் மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஆகவே ரெப்போ வட்டி உயர்வு என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவினாலும், கடன் வாங்குபவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் வட்டி விகிதம் குறித்து அறிந்து கொள்ள கடன் பெற்ற மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த செய்தி மகிழ்வானது எனலாம்.