

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வரான மூ.கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னையில் உள்ள காரம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி , முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர். எஸ்.பாரதி, பெஞ்சமின், காரப்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா உள்ளிட்ட பல திமுக முக்கிய பிரமுகர் கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கள் வெளியான நிலையில், ஊடகங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசியலில் பிரபல திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், பாரதியின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதங்களின் தொடங்கியுள்ளன.
ஆர். எஸ்.பாரதி எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஊடகங்களை பரபரப்பாக்குவது அவரது வழக்கம். இதற்கு முன் அவர் பொது ஊடகங்களைப் பற்றி கடுமையாக விமர்சித்து பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறையும் அவர் அதை போன்று ஒரு சர்ச்சையை தொடங்கி வைத்தார்.
மேடையில் பேச தொடங்கிய அவர் " இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் பொழுது, இன்னமும் நாம் தான் நான்கு கட்சியாக இருக்கிறோமா? என சந்தேகம் வந்துள்ளது. 1970 களின் தொடக்க காலகட்டத்தில் திமுகவின் கூட்டங்களுக்கு தொண்டர்கள் எவ்வாறு வருவார்களோ ? அதை போல் இன்றும் நீங்கள் வந்துள்ளீர்கள்.
திமுக ஆட்சி சென்ற பின்னர் இதுவரை நான் மூன்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். இன்றைய தலைமுறையினர் இதற்கு முன், திமுக தலைவர் தோல்வியடைந்து பார்த்தது இல்லை. அதனால் திமுக தொண்டர்கள் தற்போது சோர்வடைந்துள்ளனர். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி 50 ஆண்டு காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு தேர்தலிலும் அவர் தோற்றதே இல்லை. தொடர்ச்சியாக நடைபெற்ற 13 தேர்தல்களில் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.
இன்றைக்கு வீட்டு வரி உயர்ந்துள்ளதாக பேசுகிறார்கள். அது பற்றி உங்களுக்கு என்ன அக்கறை? எது விலை ஏறினால் என்ன? "ஓட்டு போட்டவன் தான் நடுரோட்டுக்கு வந்து தன் தலையில் மண்ணள்ளி போட்டுக் கொண்டான்". அப்படி செய்தால் தான் இந்த சமூகத்திற்கு புத்தி வரும். ஏசி பஸ் ஸ்டாப் நாங்கள் கட்டினோம் அதில் விசிலுக்கு ஓட்டு போட்ட கூட்டம் கஞ்சா அடிக்கிறது.
இவர்களுக்கெல்லாம் திமுகவின் வரலாறு சொல்ல வேண்டும், கருணாநிதியை முதல்வராக்கிய சைதாப்பேட்டை தொகுதியில் அவர் பெரிய மருத்துவமனை கொண்டு வரவில்லை. ஆனால், மா. சுப்பிரமணியன் இங்கு பெரிய மருத்துவமனையை கொண்டு வந்தார். அந்த மருத்துவமனைக்கு வந்து சென்ற நோயாளிகளின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தாலே , அவர் வெற்றி பெற்றிருப்பார். அவர்கள் எல்லாம் "தவெகவிற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்துள்ளனர், அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது" வெளிப்படையாக சொல்கிறேன்.
இனி மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள் நாம் ஐந்து வருட காலம் ஓய்வெடுப்போம். தவெக அரசு பற்றி மக்கள் இப்போதுதான் தெரிந்துக் கொள்கின்றனர் . தமிழ்நாட்டில் ஸ்டாலின் செய்தது போல் வேறு யாரும் மக்களுக்கு செய்ததில்லை என்று ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.