

தமிழக சட்டசபையில் துறை ரீதியான விவாதம் இன்று 2வது நாளாக தொடங்கியது. நேற்று போதைப்பொருள் மற்றும் தமிழ்நாட்டில் நடந்த மாணவர்கள் கொலை பற்றிய விவாதத்தை எதிர்க்கட்சிகள் பேசினர்.
இந்நிலையில் இன்று கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு நீதி வேண்டி எதிர்க்கட்சிகள் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
கடந்த வாரம் கால்நடைகளைத் தேடி கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்ற 3 தமிழர்களை, கர்நாடகா வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக கர்நாடகா அரசு அறிவித்தது.
ஏற்கனவே காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்சினை இருந்து வரும் சூழலில், இந்த கொலை சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு வழங்கிய நிவாரணம் மிகவும் குறைவு எனவும் சுட்டுக் கொள்ளப்பட்ட மூன்று தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளன.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும், கர்நாடகா வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு பதில் அளித்த தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.