

இதுவரை நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது 2026 சட்டமன்ற தேர்தல் சற்று வித்தியாசமானதாகவே மக்களுக்கு அமைந்தது எனலாம். திமுக, அதிமுக என்ற பெரும் திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த தமிழகத்தை கட்சி துவங்கி இரண்டரை வருடங்களில் பின்னுக்கு தள்ளி ஆட்சி அமைத்துவிட்டது நடிகர் விஜய் தலைமை தாங்கிய தவெக கட்சி.
தற்போது விஜய் முதல்வராகவும் அவருடன் இணைந்து பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் தவெக எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்று கொண்டுள்ளனர். இந்த ஆட்சி மாற்ற நிகழ்வுக்கு பின் சுவாரஸ்சியமான தகவல்கள் வெளிவந்து மக்களை எப்போதும் அரசியல் பரபரப்பிலேயே வைத்திருக்கிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வி.ஆர். ரஞ்சித் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
தனது அரசியல் வாழ்க்கையில் பல கட்சிகளைப் பார்த்து பல பதவிகள் வகித்து அவற்றிலிருந்து பல அனுபவங்களைப் பெற்றவர் முதுபெரும் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன். குறிப்பாக திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற பல கட்சிகளில் பணியாற்றிய அவர், இறுதியாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அந்த அணியில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக இருந்தவர் தான் வி.ஆர். ரஞ்சித் குமார்.
பின்னர் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகிய அவர், கடந்த பிப்ரவரி 19-ம்தேதி பண்ருட்டி ராமச்சந்திரனை முன்னிலையாகக் கொண்டு எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (MGR ADMK) என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் மாநில பொதுச்செயலாளராகவும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதனைதொடர்ந்து 2026 மார்ச் மாதத்தில் அவர் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேரடியாக கட்சியின் நிறுவனர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் புதிய கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை கவலையிலும் ஆழ்த்தியது.
அன்று அக்கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 91,350 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் வேட்பாளர் வி. சோமசுந்தரத்தை 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சிபுரம் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.வாக தேர்வானார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவருக்கு தவெக கட்சியின் புதிய அமைச்சரவையில் தற்போது வனத்துறை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக குறைந்த நாட்களே பதவி வகித்து, அக்கட்சியின் நம்பிக்கை பெற்ற பின்னர் விலகி, தவெகவில் இணைந்து இன்று தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக அந்தஸ்து பெற்றிருக்கிறார் ரஞ்சித் குமார் என்பது தான் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவர் மட்டுமல்ல பல கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இறுதியாக தவெகவை நம்பி அதில் இணைந்து தற்போது பல்வேறு பதவிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.