

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக யாத்திரைகளில் ஒன்றாகக் கருதப்படும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் முக்கிய யாத்திரைத் தலங்களில் தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகத்தின் புதிய மாதிரியாக இது மாறக்கூடும்.
கேரளாவின் பதனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை உலகின் மிகப்பெரிய யாத்திரை மையங்களில் ஒன்றாகும். சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் கூட்ட நெரிசல் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஏ ஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். கடந்த ஆண்டில் நடந்த தவறு இந்த ஆண்டு நடைபெறாத வகையில் அனைத்து பக்தர்களுக்கும் சபரிமலை தரிசனம் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் மந்திரி முரளிதரன் தலைமையில் திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மந்திரி முரளிதரன், கடந்த ஆண்டில் நடந்த தவறு இந்த ஆண்டில் நடைபெறாத வகையில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். சீசனுக்கு முன்னதாக முதல் மந்திரி தலைமையில் தென் மாநில மந்திரிகளின் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மண்டல மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. எனவே தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை திறம்பட செயல்படுத்த அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு இப்போதே உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டில் நடந்த தவறு இந்த ஆண்டு நிச்சயம் நடைபெறாத வகையில் செயல்படுவது உறுதி செய்யப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பிறகு மந்திரி முரளிதரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கேரளா உயர்நீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட 'விஷன் சபரிமலை' என்ற விரிவான திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த ஏஐ. அடிப்படையிலான பக்தர்கள் மேலாண்மை அமைப்பு. இதன் மூலம் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள், ட்ரோன்கள், ஜி.பி.எஸ். வரைபட உதவியுடன் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். ஏதேனும் ஒரு பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தெரிந்தால் முன்கூட்டியே அதைக் கணித்து அதிகாரிகளுக்கு இந்த ஏஐ அமைப்பு எச்சரிக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் பக்தர்களுக்கு நிகழ்நேரத் தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும். குறிப்பாக மலையேற்ற பாதையின் நிலை குறித்தும், கூட்ட நெரிசல், தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் குறித்தும் பக்தர்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படும். கூட்ட நெரிசலில் பெரியவர்களோ குழந்தைகளோ யாரேனும் தொலைந்து விட்டால் அவர்களுடைய புகைப்படத்தை வலையமைப்பில் பதிவேற்றி கேமராக்கள் மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனப்படும் ஏஐ அடிப்படையிலான பக்தர்கள் மேலாண்மை அமைப்பு அறிமுகம் ஆகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக மண்டல, மகரவிளக்கு காலங்களில் நவம்பர் - ஜனவரி வரை கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுடைய வருகை அதிகரிப்பதால் நெரிசலை சமாளிப்பதற்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும், மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.