

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளது இந்திய ராணுவ அகாடமி(IMA). பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அகாடமியில் இதுவரை 67 ஆயிரம் பேர் பட்டம் பெற்று ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். ஆனால் இதுவரை பெண்கள் யாரும் இந்த அகாடமியில் சேர்ந்து பட்டம் பெற்றதில்லை. அந்த வகையில் 23 வயதான சாய் ஜாதவ் என்ற பெண் பட்டம் பெற்று முதல் பெண் அதிகாரி என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்தவர்.
1932ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய ராணுவ அகாடமியில் இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் அதிகாரிகள் கேடேட்களாக உருவாகி உள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் அதிகாரி இந்த கௌரவத்தை பெற்றுள்ளார்.
இந்திய ராணுவ அகாடமியின் 93 வருட கால வரலாற்றில் இதுவே முதல் முறை. இவரது குடும்பத்தில் ராணுவ சீருடை அணியும் நான்காவது தலைமுறை இவர். சாய் ஜாதவ்வின் குடும்பம் ராணுவப் பின்னணியைக் கொண்டது. இவருடைய கொள்ளு தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அவரது தாத்தாவும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார். இவருடைய தந்தை சந்தீப் ஜாதவ் இன்றும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தேர்ச்சி பெண்களுக்கு இந்திய ராணுவத்தில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை காட்டுவதாக உள்ளது.சாய் ஜாதவின் வெற்றி, இளம் பெண்களுக்குப் பெரிய உத்வேகத்தை அளிக்கும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, டெரிட்டோரியல் ராணுவத்தில் லெப்டினன்ட்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெரிட்டோரியல் ஆர்மியில் இதற்கு முன்பு பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், IMAவிலிருந்து பட்டம் பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பு சாய் ஜாதவ்வுக்கு கிடைத்துள்ளது. இவர் தனது பட்டப்படிப்புக்கு பிறகு தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்று IMAவில் சேரும் வாய்ப்பைப் பெற்றவர். சாய் ஜாதவின் வெற்றி இளம் பெண்களுக்கு பெரிய உந்துதலாக இருக்கும் என்றும், அத்துடன் ஆயுதப்படைகளில் பெண்களுக்கு இருந்த தடைகளை உடைக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.