அட! அகிலேஷ் யாதவ் பிரதமர் ஆகணுமாம்!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

பா.ஜ.க.வை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் “இந்தியா” கூட்டணி அமைத்தாலும், இன்னமும் அந்தக் கூட்டணிக்குள்ளே ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்தியா முழுக்க அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தி, பா.ஜ.க. வை வீழ்த்த வேண்டும் என்று ஊருக்கு ஊர் மேடை போட்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள் கை கோர்த்து மீடியாவுக்குப் போஸ் கொடுக்கும் காட்சி மீண்டும் மீண்டும் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியே கூட இன்னமும் வெளிப்படையாக இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தி.மு.க. ஒன்றுதான் ராகுலைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று வெளிப்படையான அறிவிப்பினை செய்துள்ளது.

இன்னொரு பக்கம் கழக உடன் பிறப்புக்கள் ஸ்டாலினுக்கு அடுத்த பிரதமராகத் தகுதி உள்ளது என்று மறைமுகமாக பெருமைப் பட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். நித்திஷ் குமாரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் மனநிலை எந்தக் கட்சிக்கும் இப்போது இல்லை என்பது மட்டுமில்லை. அவரை இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொள்ளக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது. மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நாற்காலியில் உட்கார ஆசைதான்.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கும் பிரதமர் கனவு இருக்கிறது. அது, அண்மையில் அவரது பிறந்த நாளின்போது, லக்னௌவில் போஸ்டர்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

ஆம்! அகிலேஷ் யாதவ் புகைப்படத்தைப் போட்டு, “நாட்டின் வருங்காலத் தலைவர் மதிப்பிற்குரிய ஸ்ரீ அகிலேஷ் யாதவ் ஜி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!” என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருப்பவர் சமாஜ்வாதிக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஃபக்ருல் ஹசன்.

மீடியாவினர் அகிலேஷிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர் தயக்கத்துடன், “ கட்சிக்காரர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதால் மட்டுமே ஒருவர் நாட்டின் பிரதமர் ஆகிவிட முடியாது” என்று நாசூக்காக பதில் அளித்தார்.

ஆனால், கட்சியியின் ஒரு பகுதியினர், “ நம்ம கட்சித் தலைவர் நாட்டோட பிரதமர் ஆவது கிடக்கட்டும்! 2022ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில், வென்று முதலமைச்சர் ஆகும் வாய்ப்பையே நழுவ விட்டுவிட்டார்! அவர் முதலில் உ.பி. முதலமைச்சராக வரட்டும்! அப்புறம் டெல்லி பற்றிக் கனவு காணட்டும்!” என்று சற்று காட்டமாகவே விமர்சனம் செய்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com