

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எப்போதும் பேசுபொருளாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தொடக்க காலத்தில் அதிமுகவில் பயணித்த இவர் , ஜெயலலிதா காலத்திலேயே ஊழல் புகார் சுமத்தப்பட்டவர். அவர் அதிமுகவில் இருக்கும் பொழுது அவர் மீது ஊழல் புகார் கூறி திமுக வழக்கு தொடர்ந்தது. நீண்ட காலமாக அதிமுகவில் அமைச்சராக இருந்த அவர், அதிமுக முதன்முதலாக உடைந்த போது தினகரன் தலைமையிலான அணிக்கு சேர்ந்தார்.
அதன் பின்னர் தினகரனுக்கு பக்கபலமாக இருந்தவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உதயமான போது அதிலும் தொடர்ந்து பயணித்து வந்தார். ஒரு கட்டத்தில் அமுமூக சரிய தொடங்கிய பின்னர் , அங்கிருந்து வெளியேறி திமுகவில் தஞ்சம் அடைந்தார். திமுகவில் அவர் சேர்ந்த பின்னர் கொங்கு மண்டலத்தின் முக்கிய பவர் செண்டராக உருவெடுத்தார். அந்த பகுதியில் உள்ள திமுகவினர் மத்தியில் மிகப்பெரிய ஆதிக்கம் செய்தார்.
திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளிலும் இவரது செல்வாக்கு அபரிதமானது. கொங்கு வட்டாரத்தில் கூட்டணி கட்சிகளில் யார் வேட்பாளர்? என்பதை கூட செந்தில் பாலாஜி முடிவு செய்யும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார்.
திமுக ஆட்சியில் அமர்ந்த போது ,செந்தில் பாலாஜிக்கு வருமானம் அதிகம் தரும் மின்துறை மற்றும் மது இலகா ஆகியவை ஒதுக்கப்பட்டது. அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குறைந்த கால கட்டத்திலேயே திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக முக்கியமான தலைவராக உருவெடுத்தார். எவ.வேலு , நேரு போல ஸ்டாலின் குடும்பத்தில் அதிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு , அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தார்.
திமுகவின் ஆட்சிக்காலத்தில் ஊழல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு அமைச்சராகவே சிறைச்சாலையில் வாசம் செய்த அவர் , நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். திமுக அமைச்சராக இருந்தாலும் கூட அவர் சிறை செல்வதற்கு காரணமாக, திமுக போட்ட வழக்கு ஆதாரமாக இருந்தது.
சட்டமன்ற தேர்தல் முடிவில், திமுக தேர்தலில் தோல்வியை பின்னர் தமிழக வெற்றி கழகத்திற்கு தாவுவதற்கு செந்தில் பாலாஜி தயாராக இருந்தார். ஆனால் , கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெகவின் சந்தேக கண் செந்தில் பாலாஜி மீது இருந்ததால் , அவரை இணைத்துக் கொள்ள எந்த ஒரு ஆர்வமும் தவெக காட்டவில்லை. மேலும் விஜய், செந்தில் பாலாஜியை மிக கடுமையாக விமர்சித்து திருச்சி கூட்டத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய செல்வாக்கு எப்படிப்பட்டது? என்பதை தவெகவிற்கு காட்ட வேண்டும் என்று நினைத்து, அந்த கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் இழுக்க முயற்சி செய்து உள்ளதாக , அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த விவாகரத்தில் முதல்வர் விஜய், செந்தில் பாலாஜியின் மீது மிக கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியை அரசு கைது செய்ய துடிப்பதால், அவர் பாஜக பக்கம் செல்ல தூது விட்டுக் கொண்டிருக்கிறார். திமுக அவரை முற்றிலும் கைவிட்டு விட்டதாக கருதுகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவர் பாஜகவில் சேர முயற்சி செய்தாலும், அவர்கள் இவரை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் , தற்போது பாஜக தமிழ் நாட்டின் பின்தங்கியுள்ள நிலையில் ,செந்தில் பாலாஜியை சேர்க்க மீண்டும் தூது விட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளது.