

கற்பனை கதைகளையும், சினிமா காட்சிகளையும் மிஞ்சும் அளவிற்கு நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சில நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
2026-ஆம் ஆண்டு, தொடக்கத்தில் ஜனவரியில், தன் கூட்டத்திலிருந்து வழிதவறிச் சென்ற ஒரு பென்குவின் பற்றிய செய்தி வந்தது. பிப்ரவரியில், தன் தாயால் கைவிடப்பட்டு, ஒரு ஒராங்குட்டான் பொம்மையுடன் வளர்ந்த பஞ்ச் என்ற குரங்கு பற்றிய செய்தி வந்தது. இப்போது, மார்ச் மாதம், சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஒரு கடத்தல்க்காரரிடமிருந்து தப்பித்த 7 நாய்க் கூட்டத்தின் மாபெரும் தப்பித்தல் இணையத்தை அதிர வைக்கிறது.
2026, மார்ச் 16 அன்று, சீனாவின் ஜீலின் மாகாணத்தில் உள்ள சாங்கன் நகரின் நெடுஞ்சாலையில் ஓடும் லாரியில் இருந்து ஏழு நாய்கள் தப்பித்துச் சென்ற சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. நாய் இறைச்சிக் கடை ஒன்றில் வேலைபார்க்கும் திருடர்கள், கோர்கி நாய், ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் ,கோல்டன் ரெட்ரீவர் , லாப்ரடார் மற்றும் ஒரு பெக்கிங்கீஸ் உள்ளிட்ட 7 நாய்களை ஒரு லாரியில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்த இந்த நாய்கள் கூட்டமாக சாலையில் சென்றன.
அவ்வாறு சென்ற நாய்கள் இரண்டு நாட்களில் 17 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து தங்கள் உரிமையாளரிடம் சென்று சேர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன நாய்கள் திரும்பவும் வந்து சேர்ந்தது, உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 16 அன்று, ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில், லூ என்ற பெயர் கொண்ட குடியிருப்பாளர் ஒருவர் அந்த நாய்கள் குழு ஒன்று நடந்து செல்வதை வீடியோ எடுத்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், நாய்கள் நெருக்கமான வரிசையில் நகர்ந்து செல்வது காணப்பட்டது, அதில் ஒரு குறிப்பிட்ட விவரம் தனித்துத் தெரிந்தது.
மையத்தில் காயமடைந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் இருந்தது. அதைச் சுற்றி மற்றவை நெருக்கமாக இருந்தன. ஒரு கோர்கி நாய் அந்தக் குழுவை வழிநடத்திச் சென்றது; யாரும் பின்தங்கிவிடவில்லை என்பதை உறுதி செய்வது போல, அது சில அடிகளுக்கு ஒருமுறை நின்று திரும்பிப் பார்த்தது.அந்த கோர்கி நாய் அந்தக் குழுவை வழிநடத்துவது போல் தோன்றியது.
அவற்றைச் சாலையிலிருந்து விலக்கி வழிநடத்த முயன்றதாகவும், ஆனால் அந்த நாய்கள் தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்றும் லூ கூறியுள்ளார். பின்னர் அவர், உள்ளூர் அதிகாரிகளிடம் உதவி கோரி, அந்தக் காணொளியை டூயின் (Douyin) தளத்தில் பதிவிட்டார். அவ்வழியே சென்ற மற்றொருவர், அந்த நாய்கள் அருகிலுள்ள வயல்வெளிகளில் சுற்றித் திரிவதைப் படம்பிடித்தார்; இது, அவை ஏற்கெனவே சிறிது நேரமாக அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்ததை உணர்த்தியது. உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாகத் தலையிட்டனர்.
இதனிடையே, கோர்கி நாய் இவ்வளவு தூரம் உடன் இருந்த நாய்களையும் வழிநடத்தி, உரிமையாளரிடம் கொண்டு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாய்கள் உரிமையாளரிடம் வந்து சேர்ந்த வீடியோ மற்றும் இந்த நாய்கள் கூட்டமாகப் பாதையில் நடந்து வந்த வீடியோக்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த நாய்கள் இவ்வளவு தூரம் வழியை மறக்காமல், வந்து சேர்ந்துள்ளது பெரும் ஆச்சரியம் தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த நாய்கள் அனைத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவை என்றும், அவை ஒன்றாகச் சுற்றித் திரிவது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது.காணொளி வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு, மார்ச் 19 அன்று ஏழு நாய்களும் வீடுகளுக்குத் திரும்பிவிட்டதாகத் தன்னார்வலர்கள் உறுதிப்படுத்தினர். அவை மூன்று வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவை என்றும், முதலில் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணித்திருந்தன என்றும் தெரியவந்தது.
இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் குறித்த எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. சீனச் சட்டத்தின்படி, திருடப்பட்ட விலங்கின் மதிப்பைப் பொறுத்து, நாய்களைத் திருடினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், நாய் இறைச்சி உண்பதற்கு நாடு தழுவிய தடை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .