பாகிஸ்தானில் கடும் வெள்ளம் - 40 பேர் பலி

Pakistan flood
Pakistan flood
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்த வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மட்டும் 10 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்குச் சென்றிருந்த அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலத்த மழையால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து, கரையோரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளன. பல இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், 63 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: யுத்தகாண்டா அத்தியாயம் 2 - "பிரமாதமா இல்லனாலும் மோசமா இல்லப்பா!"
Pakistan flood

பாகிஸ்தானில் பருவமழை காலத்தில் இதுபோன்ற வெள்ளப் பெருக்கினால் பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தாலும், இந்த ஆண்டு பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com