

பொருட்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்களின் செல்போன் எண் கேட்பது கட்டாயம் இல்லை, இதை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விளம்பரங்களுக்காக எண் கேட்பதை மறுக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.
இன்றைய நவீன உலகில், சமீப காலமாக நாம் ஒரு சிறிய மளிகை பொருள் முதல் விலை உயர்ந்த ஷாப்பிங் மால்களுக்கு சென்று எந்த பொருட்கள் வாங்கினாலும் பில் போட சென்றால் கவுண்டரில் நம்மிடம் கேட்கப்படும் முதல் கேள்வி.. ‘சார் உங்கள் செல்போன் நம்பர் என்ன?’ என்பது தான். ஏதோ அது ஒரு கட்டாய நடைமுறை போலவும், எண் தராவிட்டால் பில் போட முடியாது என்பது போலவும் ஒரு மாயை இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு பொருளை விற்பனை செய்ய உங்கள் தனிப்பட்ட செல்போனை எண்ணை தரவேண்டிய அவசியம் இல்லை.
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு தனிநபரின் செல்போன் எண் என்பது வெறும் தொடர்பு எண் மட்டுமல்ல. அது உங்களை பற்றிய பல தகவல்களை தரும் ஒரு திறவுகோலாகும். நீங்கள் எங்கே பொருட்கள் வாங்குகிறீர்கள், என்ன பொருள்களை வாங்குகிறீர்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள், உங்களுக்கு என்ன பிடிக்கும் போன்ற உங்களின் நுகர்வு பழக்கவழக்கங்களை இந்த எண் மூலம் நிறுவனங்கள் கண்காணிக்கின்றன.
ஒரு ஆய்வறிக்கையின்படி, மிதிப்புமிக்க தரவுகளை உள்ளடக்கிய உங்கள் செல்போன் எண்ணை வணிக நிறுவனங்களிடம் ஒப்படைப்பது உங்கள் தனிப்பட்ட ரகசியத்தை அடகு வைப்பதற்கு சமம் என்று கூறப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின் படி எந்தவொரு வணிக நிறுவனமும் ஒரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை அதாவது செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை வழங்ககோரி கட்டயாப்படுத்த முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை தேவையில்லாமல் பகிர்வது, தேவையற்ற விளம்பர அழைப்புகள் (Spam calls) மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச தகவல்களை மட்டுமே அவர்கள் கேட்க வேண்டும். பில் தயாரிப்பதற்கு பெயர் அல்லது செல்போன் எண் தொழில்நுட்ப ரீதியாக தேவையில்லை.
ஒருவேளை நீங்கள் செல்போன் எண் தர மறுப்பதால் ஒரு கடை உங்களுக்கு பொருளை விற்க மறுத்தால் அது தவறான வணிக நடைமுறை எனக்கருதப்படும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை பெறுவதற்கு பின்னால் பெரிய வியாபார யுக்திகள் மறைந்து இருக்கின்றன. அதாவது சலுகைகள், தள்ளுபடி என்ற பெயரில் உங்கள் அனுமதியின்றி தொடர்ந்து வாட்ஸ்அப், குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதுடன், ரிவார் பாயிண்டுகள் என்ற பெயரில் அடுத்தமுறை பொருட்கள் வாங்கினால் சலுகை தரப்படும் என்ற பெயரில் செல்போன் எண்கள் பெறப்படுகின்றன.
அதுமட்டுமின்றி மேலும் நீங்கள் எப்போது பொருட்கள் வாங்குகிறீர்கள்? அடிக்கடி என்ன பொருட்கள் வாங்குகிறீர்கள் என்பதை கண்காணித்து உங்களை மீண்டும் மீண்டும் வாங்கத் தூண்டும் உத்திகளை வகுக்கவும் வணிக நிறுவனங்கள் திட்டமிடுகிறார்கள். இது தவிர செல்போன் எண்களை மற்ற விளம்பர நிறுவனங்களுக்கு அல்லது தரவு தொகுப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காகிதத்தை சேமிப்பது என்ற பெயரில் பல நிறுவனங்கள் இப்போது செல்போன் எண்ணுக்கு டிஜிட்டல் பில் அனுப்புவதாக கூறினாலும், உண்மையில் இது உங்களின் தரவுகளை பெறுவதற்கான ஒரு எளிய வழியாகவே பயன்படுத்தப்படுகிறது. காகித பில் பெறுவது உங்கள் உரிமை என்பதை மறக்க வேண்டாம்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
பொதுமக்களாகிய நாம் கடையில் பொருட்களை வாங்கி விட்டு பில் போடும் போது, எனது செல்போன் எண்ணை தர விருப்பமில்லை, சாதாரண பில் மட்டும் தாருங்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் நிறுவனங்கள் உங்களிடம் செல்போன் எண் கேட்டு வற்புறுத்தினால் இது சட்டப்படி அவசியமில்லை என்பதை அவர்களுக்கு தெளிவுப்படுத்துங்கள். விற்பனையாளர் கண்டிப்பாக எண் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அதை நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்.
அதேசமயம் ஏதேனும் நிறுவனம் உங்கள் எண்ணை கேட்டு உங்களை துன்புறுத்தினாலோ அல்லது பொருட்கள் தர மறுத்தாலோ, தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் எண்- 1915 மற்று இணையதளம் மூலமாகவோ அல்லது செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, அத்தியாவசியமில்லாத பட்சத்தில் உங்கள் மொபைல் எண்ணை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.