விஜய் சொன்னது போலவே தொடங்கிடுச்சு..! சேலம் மாநகரில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைப்பு..!

singappen special task force
singappen special task forceimage credits :vikatan
Updated on

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியாக அரசு அமைத்திருக்கும் தவெக கட்சியின் தலைவரான விஜய், தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றதும் விழா மேடையிலேயே கையெழுத்திட்டு மக்களின் வரவேற்பை பெற்றது தான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை.

ஏற்கனவே பெண்களை பாதுகாக்க மகளிர் காவல் நிலையங்கள் இருக்கும் நிலையில் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் குறித்து பலரும் ஆவலுடன் விவாதித்து வந்த நிலையில் தற்போது வெறும் பேச்சாக இல்லாமல் இத்திட்டத்தை துவங்கி பிள்ளையார் சுழி போட்டுள்ளது சேலம் மாவட்டம்.

காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சேலம் மாநகரப் பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செயயும் பொருட்டு , "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" (Singappen Special Task Force - SSF) திட்டம் சேலம் மாநகரக் காவல் ஆணையரால் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் இந்த அதிரடிப்படையின் ஒவ்வொரு குழுவிலும் 1 காவல் உதவி ஆய்வாளர், 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2 பெண் தலைமை காவலர்கள் என மொத்தம் 6 தகுதி வாய்ந்த பெண் காவலர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து அரசின் அறிவிப்பு

  • முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ், செயல்பாடு.

  • குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ள இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு.

  • பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் தீவிர கண்காணிப்பு.

  • பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பெறப்படும் மனுக்களுக்கு உடனடி மற்றும் உரிய நடவடிக்கை.

  • பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு.

  • சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

  • சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

சேலம் மாநகரில் பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட ஒரு முன்னோடி நடவடிக்கையாகக் கருதப்படும் இத்திட்டம் விரைவில் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்களிடையே குறிப்பாகப் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதையும் படியுங்கள்:
ஐஐடி முதல் எம்பிபிஎஸ் வரை..! - தவெக எம்.எல்.ஏ-க்களின் மெய் சிலிர்க்க வைக்கும் கல்வித்தகுதி..!
singappen special task force
logo
Kalki Online
kalkionline.com