

திருப்பதி லட்டு நெய் கலப்படத்தில் ரூ.234.51கோடி முறைகேடு மற்றும் அதில் கலக்கப்பட்டது பாமாயில் என்று விசாரணையில் வெளியான தகவல் பக்தர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD) லட்டு பிரசாத்துக்காக தினமும் ஆயிரக்கணக்கில் கிலோ நெய் (ghee) பயன்படுத்துகிறது.
செப்டம்பர் 2024-இல் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு ஆயிரக்கணக்கான லட்டுகளில் விலங்கு கொழுப்பு (animal fat)கலந்ததாக குற்றச்சாட்டினை கூறினார். மேலும் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி) ஆட்சிக் காலத்தில் கழிப்பறைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நெய்யுடன் கலக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
திருமலை லட்டு நெய் கலப்பட வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) கலப்பட நெய்யை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பால் நிறுவனங்களில் ஒன்றிற்கு LABSA விற்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த ரசாயனம் நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்று SIT அறிக்கை எங்கும் குறிப்பிடவில்லை.
இதில் விலங்கு கொழுப்பு கலந்த லட்டு என்ற குற்றச்சாட்டு மதரீதியான பாதிப்புகளை எழுப்பியதால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிஐ தலைமையில் நடந்த விசாரணை அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி லட்டில் நெய்க்கு பதிலாக பாமாயில் கலந்துள்ளதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறியது போல் விலங்கு கொழுப்பு இல்லை எனவும் அறிக்கை கூறுகிறது.
சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாமாயில், பாம் கர்னல் ஆயில், பால்மோலின், பீட்டா கரோட்டின், அசிடிக் ஆசிட் எஸ்டர், லாக்டிக் ஆசிட் (உணவுத் தரம்), மோனோகிளிசரைடு, நெய் ஃபிளேவர் போன்ற கலப்படப் பொருட்களைக் கலந்து நெய்யைத் தயாரித்தனர் என்று கூறியுள்ளதுடன் 2024-ல் நாயுடு அரசு கூறியது போல, ஆய்வக அறிக்கைகளில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 59.71 லட்சம் கிலோ நெய்யில் செய்த கலப்படம் மூலம் 234.51 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வுக்கு கலப்பட நெய்யை அனுப்பாமல் சந்தையில் வாங்கிய புதிய நெய்யை அனுப்பியதாகவும் கலப்பட விவகாரத்தை மறைக்க லஞ்சமாக அதிகாரிகளுக்கு செல்போன் ,தங்க நாணயங்கள் போன்றவை லஞ்சமாக தரப்பட்ட தாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் தரப்பட்டதும் டைரி சான்று மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் ₹234 கோடி நிதியைப் மோசடி செய்துள்ளதாகவும், கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது குறித்த விலங்கு கொழுப்பு குற்றச்சாட்டு பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டு திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரத்தில், CBI-ன் சிறப்பு புலனாய்வு குழு (SIT) இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்துள்ளதுடன் இதில் குற்றம் செய்தவர்களுக்கு சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனியாவது கோவில் பிரசாதங்களில் கலப்படம் செய்யாமல் பக்தர்களுக்கு நிம்மதி தரவேண்டும் தேவஸ்தானங்கள்.