சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டது. தற்போது இந்தப் பேருந்து முனையத்தை ரயில்வேயுடன் இணைக்கும் மிக முக்கியமான ஆகாய நடைபாதை (Skywalk) பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த ஆகாய நடைபாதை (Skywalk) சிறப்பம்சங்கள் :
ஜி.எஸ்.டி சாலையைக் கடந்து பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் இந்த நடைபாதை பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.
இதன் நீளம்: சுமார் 275 மீட்டர் நீளம் கொண்ட இந்த நடைபாதை, ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்:
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இருபுறமும் மின்தூக்கிகள் (Lifts) மற்றும் நகரும் படிக்கட்டுகள் (Escalators) அமைக்கப்படுகின்றன.
ஜி.எஸ்.டி சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல், பயணிகள் சாலையைக் கடக்காமல் நேரடியாக ரயில் நிலையத்திற்குச் செல்ல இது உதவும்.
இந்த நடைபாதை பணிகள் மார்ச் மாதமே முடிவடைய வேண்டியவை. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.நடைபாதையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் குறைபாடுகளை (Deflection) ஐ.ஐ.டி மெட்ராஸ் நிபுணர்கள் ஆய்வு செய்து சரிசெய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், இறுதிக்கட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி,மே முதல் வாரத்தில் ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே மீதமுள்ள இரும்புத் தூண்களை (Girders) நிறுவும் பணிகள் நடைபெறவுள்ளன.
மே 4-ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்துத் துறையின் அனுமதியுடன் இரவு நேரங்களில் இதற்கான பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மே மாத இறுதிக்குள் ஆகாய நடைபாதை மற்றும் புதிய ரயில் நிலையம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்(Halt Station) :
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் தடத்தில் இது அமைந்துள்ளதால், பயணிகள் எளிதாக பேருந்து நிலையத்தை அடைய முடியும்.தற்போது பயணிகள் ஊரப்பாக்கம் அல்லது வண்டலூரில் இறங்கி ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கிளாம்பாக்கம் வரவேண்டிய சூழல் உள்ளது. ரயில் நிலையம் திறக்கப்பட்டால், இந்தக் சிரமம் முற்றிலும் நீங்கும்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையமும்,ஆகாய நடைபாதையும் பயன்பாட்டிற்கு வரும்போது, இது சென்னையின் மிகச்சிறந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக (Multi-modal Transport Hub) மாறும். பயணிகளின் நீண்ட நாள் காத்திருப்பு இந்த மே மாதத்தில் ஒரு சுப முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.