முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தின விழா!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தின விழா!

ரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு அளிப்பதிலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 27ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நாளினை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டதை அடுத்து, நாளை 27.6.2023 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும், ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்’ கீழ் முதல் நூறு பயனாளிகளுக்கு 57.55 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க 18.94 கோடி ரூபாய் மானியத்துக்கான ஆணையினை வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர்.

இந்த விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகள், குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா காடம்புலியூரில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய் நிகர் கண்காட்சியகம் ஆகியவற்றை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும், இந்த விழாவில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் பதிப்பின் கீழ் வெற்றி பெற்ற பத்து மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பத்து லட்சம் ரூபாய் வழங்குகிறார் தமிழக முதல்வர்.

மேலும், சமச்சீர் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்துத் தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய 1510 கோடி ரூபாய் மதிப்பில் 7,400 வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கான ஃபேம் டிஎன் (FaMe TN) மற்றும் சிட்பி (SIDBI) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவையும்  முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த விழாவில், தொழில்துறையின் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது, மற்றும் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்துக்கான விருது, சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது, தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்துக்கான விருது, சிறப்புப் பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்துக்கான விருதுகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி வசதியினை சிறப்பாக வழங்கிய மூன்று வங்கிகளுக்கான விருதுகளையும் முதல்வர் வழங்க இருக்கிறார். இந்த விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் 1723.05 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, சுமார் 30,000 நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com