திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 8 வாரங்களுக்கு பின்பே ஓடிடி-யில் வெளியிட வேண்டும என தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்து விடுவதால் வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் சரிவர ஓடவில்லை. ரசிகர்கள் வருகை குறைந்து விட்டது. அதற்கு காரணம் புதிய திரைப்படங்கள் 4 வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளியாவதால் மக்கள் வீட்டிலேயே பார்த்துக் கொள்கின்றனர். எனவே தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிடவேண்டும்.
4 வாரங்களில் புதிய திரைப்படங்களை திரையிடுவதாலும், அதற்கான விளம்பரங்கள் ஒரு வார காலம் கொடுக்கப்படுவதாலும் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறைகிறது.
எனவே 8 வாரங்களுக்குப் பிறகே புதிய திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள்.
மேலும் அதற்கான விளம்பரங்களை 4 வாரங்களுக்குப் பிறகு தான் வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி உள்ளார்கள்.
திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும் பொழுது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும். புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% மட்டுமே பங்குத் தொகையாக தயாரிப்பாளர்கள் கேட்க வேண்டும். விளம்பர போஸ்டர்களுக்கான 1%பப்ளிசிட்டி வரியை நீக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அத்துடன் அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகளில்
திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல உயர்த்தி வசூலிக்க அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். மின்சார கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகள் திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் தீர்மாணங்களை நிறைவேற்றியுள்ளனர்.