கூகுளுக்கு 32 மில்லியன் டாலர் அபராதம் விதித்த தென்கொரியா.

கூகுளுக்கு 32 மில்லியன் டாலர் அபராதம் விதித்த தென்கொரியா.

லகிலேயே டெக் நிறுவனங்களில் மிகவும் பிரபலமான கூகுளுக்கு, தென்கொரிய அரசாங்கம் மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ள சம்பவம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

KFTC என அழைக்கப்படும் தென்கொரியாவின் ஃபேர் டிரேட் கமிஷனானது கூகுள் நிறுவனத்திற்கு 32 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. ஏன் இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள, முதலில் Onestore என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். அப்போதுதான் கூகுள் என்ன தவறு செய்தது? அவர்கள் மீது தென்கொரிய அரசாங்கம் என்ன குற்றம் சாட்டுகிறது என்பதை யெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியும். 

Onestore என்பது தென் கொரியாவின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான, SK டெலிகாம், இன்டர்நெட் நிறுவனமான Never மற்றும் KD & LG Plus நிறுவனங்களால் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தென்கொரியாவில் கூகுளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ப்ளே ஸ்டோர் போலவே செயல்படும் ஒரு செயலியாகும். 

Playstore-க்கு சவால் விடும் வகையில், கூகுளுக்கு எதிராக ஒரு செயலி வந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? செயலிகளை உருவாக்கும் டெவலப்பர்கள், ஒன்ஸ்டோரை அவர்களின் செயலிகளுக்கான முதல் தளமாகத் தேர்வு செய்தால், ப்ளே ஸ்டோரில் அவர்களின் தயாரிப்புகள் ஒருபோதும் இடம்பெறாது என அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டியது கூகுள் நிறுவனம். 

மேலும் தென்கொரியாவுக்கு வெளியே உள்ள சந்தைகளில் தென் கொரியர் டெவலப்பர்களுக்கு தேவையான உதவியை செய்வோம் என்றும் Google தெரிவித்தது. கூகுளின் இந்த வியாபாரத் தந்திரத்தால் ஒன்ஸ்டாரின் பங்கு 2016ல் 20% சதவீதத்திலிருந்து, 2018ல் 10% சதவீதமாகக் குறைந்தது. அதேசமயம் கூகுளின் பங்கானது, 80ல் இருந்து, 90 சதவீதமாக உயர்ந்தது. 

இதனால் ஒன் ஸ்டோருக்கு எதிராக கூகுள் நிறுவனம் செயல்பட்டதாகக் கூறி தென்கொரிய அரசு 32 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதமானது செயலிகளின் சந்தையில் ஒரு நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும், மேலும் கூகுளின் ஆதிக்கம் மனநிலையை தடுப்பதற்குமான ஒரு முயற்சியாக KFTC பார்க்கிறது. 

இருப்பினும் கூகுள் தரப்பிலிருந்து அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்படுகின்றன. கூகுளின் செய்தி தொடர்பாளர் இது பற்றி பேசியபோது," நாங்கள் விசாரணைக்கு உறுதியாக ஒத்துழைக்கிறோம் என்றும் எந்தவிதமான சட்டத்தையும் நாங்கள் மீறவில்லை" என்றும் கூறியிருந்தார். 

கூகுளுக்கும் தென்கொரிய அரசுக்கும் அபராதம் சார்ந்த விஷயங்களில் நடக்கும் மோதல்களில் இது மூன்றாவது சம்பவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com