விமானத்தின் கழிப்பறையில் சிக்கிய பயணி!

ஸ்பைஸ் ஜெட்
ஸ்பைஸ் ஜெட்

விமானத்தில் கழிப்பறையின் கதவை திறக்க முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்ட ஆண் பயணி ஒருவர், மும்பையில் இருந்து பெங்களூரு வரை கழிப்பறையிலேயே பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி-268 விமானம் நேற்று முன்தினம் அதிகாலை மும்பையில் இருந்து பெங்களூரு புறப்பட்டது. இதில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழிப்பறைக்குச் சென்றார். ஆனால் அவர் கழிப்பறையில் இருந்து திரும்பும்போது, கதவு திறக்காமல் செயலிழந்தது. இதனால் உள்ளே சிக்கிக் கொண்ட அவர் ‘அபாய குரல்’ எழுப்பினார். இதைக்கேட்டு அங்கு சென்ற விமான ஊழியர்கள் கழிப்பறையின் கதவை வெளியில் இருந்து திறக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

கதவை திறக்க வேறு வழியில்லாததை உணர்ந்த விமான ஊழியர்கள் ஒரு காகிதத்தில் சிறிய குறிப்பு எழுதி கதவு இடுக்கு வழியே உள்ளே அனுப்பினர். “சார் பதற்றம் அடைய வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கி விடும். பிறகு பொறியாளர் வந்து கதவை திறப்பார்” என்று அதில் கூறியிருந்தனர்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் பொறியாளர்கள் உள்ளே சென்று கதவை உடைத்து, சுமார் 100 நிமிடங்கள் உள்ளே தவித்த பயணியை மீட்டனர். பிறகு அந்தப் பயணிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. அந்தப் பயணி மிகவும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

நடந்த சம்பவத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது. எனினும் கழிப்பறையில் பயணம் செய்ய நேரிட்ட பயணிக்கும் முழு டிக்கெட் பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என தெரிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com