ஒரு கிரிக்கெட் டெஸ்ட் தொடர் முழுவதும் ஒரே ஒரு கேப்டன் தான் பொதுவாக விளையாடுவார். தவிர்க்க முடியாத நேரங்களில் அடுத்த கேப்டன் தலைமை தாங்குவது வழக்கம்.
ஐந்து டெஸ்ட்டுகள் கொண்ட தொடரில் நான்கு கேப்டன்கள். இந்நிகழ்வு வேறு எங்கும் இல்லை, நம் இந்திய நாட்டில்தான். ஆம் அதை குறித்து இங்கே காண்போம்.
1958 - 59 ம் ஆண்டு, ஐந்து டெஸ்ட் போட்டிகள் மற்றும் சில முதல் தர போட்டிகள் விளையாட, மேற்கு இந்திய கிரிக்கெட் அணியினர் கெர்ரி அலெக்சாண்டர் (Gerry Alexander) தலைமையில் நமது தேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும், இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவர் குலாம் அஹமத். அப்போதெல்லாம் தேர்வு குழு தலைவர்தான் கேப்டனை தேர்வு செய்வார். எனவே அந்த கால கட்டத்தில் தேர்வு குழு தலைவராக இருந்த லாலா அமர்நாத் விருப்பப்படி கேப்டனாக தேர்வு ஆனவர் குலாம் அஹமத் (Gulam Ahmed). ஆனால் நடந்தது, வேறு.
முதல் டெஸ்ட் அன்றைய பம்பாயில் (இன்றைய மும்பை) துவங்குவதற்கு முன் குலாம் அஹமத், காயம் காரணமாக டெஸ்ட்டில் விளையாடுவதிலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில், பாலி உம்ரீக்கர் (Polly Umrigar) தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி அந்த மேட்சை சமன் செய்தது.
கான்பூரில் (Kanpur) நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது. மேற்கு இந்திய அணி 200 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் வென்றது. அந்த டெஸ்ட்டின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் குலாம் அஹமத்.
கல்கத்தாவில் (இன்றைய கொல்கொத்தா) நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டையும் வழி நடத்தியவர் கேப்டன் குலாம் அஹமத். இருந்தும் அவரால் வெற்றி கொள்ள முடியவில்லை. நான்கு நாட்கள் முடிவதற்கு முன்பாகவே மேட்ச் முடிந்துவிட்டது.
அச்சமயம், இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு எங்கும் பேசுபொருளாக மாறிவிட்டது. தேர்வு குழு உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை. குழப்பம் நிலவியது. இந்திய கிரிக்கெட்டின் நிலை குறித்து சட்டசபையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. விவாதம் செய்தனர்.
நான்காவது டெஸ்ட் மதராஸில் (இன்றைய சென்னை) விளையாடுவதற்கு முன்பாக குலாம் அஹமத் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஒய்வு பெறுவதை அறிவித்து விட்டார்.
வேறு வழியில்லாமல் பாலி உம்ரீக்கரை கேப்டனாக வழி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அணியை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்தது. விஜய் மஞ்சுரேகர் காயம் காரணமாக விளையாட இயலவில்லை. அவருக்கு பதிலாக பாலி உம்ரீக்கர் பேட்ஸ்மேன் வேண்டும் என்றார். ஆனால் கிரிக்கெட் வாரியம் ஒரு ஸ்பின் பவுலர் வேண்டும் என்றனர். பாலி உம்ரீக்கர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதோடு, அதை செய்தும் விட்டார்.
அவரது இடத்தை வினு மான்காட் (vinoo mankad) நிரப்பினார். அந்த டெஸ்ட் போட்டியில், மேற்கு இந்திய தீவு அணி கிட்டதட்ட 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஐந்தாவது நியூ டெல்லி டெஸ்ட்டில் ஜி எஸ் ராம்சந்த் (G S Ramchand) கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கேப்டனாக தேர்வு ஆனவர் 39 வயதான ஹேமு அதிகாரி (Hemu Adhikari). அவரால் வெற்றி பெற முடியாவிட்டாலும் அந்த டெஸ்ட் போட்டியை சமன் செய்தார்.
இந்த நான்கு கேப்டன்களைத்தவிர, இந்திய அணியில் அந்த தொடரின் ஐந்து டெஸ்ட்களிலும் ஆடிய இந்திய வீரர்களின் எண்ணிக்கை 24 என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.