மக்களே உஷார்..! ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

vande bharat
vande bharatimage source:hindustantimes
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ரயில்கள் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  “ரயில்களின் மீது கல் எறிவது போன்ற சட்ட விரோத செயல்கள், பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்தையும், ரயில் சேவையில் இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன.

ரயில்கள் மீது கல் வீசுவது ஒரு கடுமையான குற்றமாகும். ஓடும் ரயிலின் மீது வீசப்படும் கற்கள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருக்கும் பயணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பெரிய காயங்களையும், நிரந்தர உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். இத்தகைய சம்பவங்கள் பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தையும் மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. எனவே, ரயில்வே சட்டம், 1989-ன் கீழ், ரயில்கள் மீது கல்வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பிரிவு 152-ன் கீழ். ரயிலின் மீது தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் கல் அல்லது எந்தவொரு பொருளையும் வீசுவது கடும் குற்றமாகும். இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இதேபோல், பிரிவு 154-ன் கீழ், பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இத்தகைய செயல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும். இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்கச் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.

சென்னை கோட்டத்தின் முக்கியமான மற்றும் பதற்றமான பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மற்றும் அரசு ரயில்வே போலீஸார் (ஜி.ஆர்.பி) ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிசிடிவி மற்றும் இதர நவீன கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடந்தால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்கு தகவல் தெரிவிக்கலாம்.

அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் சென்னை ரயில்வே கோட்டம் உறுதியுடன் உள்ளது. உயிர்ச் சேதங்களையும் ரயில்வே சொத்துகளையும் பாதுகாக்கப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று சென்னை ரயில்வே கோட்டத்தின் செய்த்க் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com