

டெண்டர் கோரப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டதால் சிக்கல் ரேஷன் கடையில் துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளை நம்பி 2.26 கோடி அட்டைதாரர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறப்பு பொது வழங்கல் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 என்ற விலையிலும், ஒரு கிலோ பாமாயில் ரூ.25 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்விலிருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இது பெரிதும் உதவியாக உள்ளது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படும் துவரம்பருப்பு நியாய விலை கடைகள் மூலம் ரூ.30க்கு கிடைப்பதால் இங்கு வழங்கப்படும் துவரம் பருப்பை பொதுமக்கள் தவறாமல் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய நிலை கடைகளில் ஜூன் மாதம் 2வது வாரம் வரைக்கான துவரம் பருப்பு மட்டுமே ஸ்டாக் உள்ளதாக செய்திகள் வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது,
கடந்த சில மாதங்கள் தேர்தல் நடைமுறை அமலில் இருந்ததால் புதிதாக டெண்டர் கோரப்படவில்லை என்றும் புதிய ஆட்சி பொறுப்பேற்று கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு அமைச்சர்கள், செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் கவனத்திற்கு துவரம் பருப்பு கொள்முதல் குறித்த தகவல் கொண்டு செல்லப்பட்டது என்றும் அதன்படி, உணவு வழங்கல் துறை மூலம் கடந்த 22ம் தேதி துவரம் பருப்புக்கான டெண்டர் கோரப்பட்டு 29ம் தேதியுடன் டெண்டர் நிறைவு பெற்று குறைந்த விலையில் பருப்பு கொள்முதல் செய்யும் நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆனால், துவரம் பருப்புக்கான டெண்டரை தமிழக அரசு திடீரென ரத்து செய்து விட்டது. அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை என கூறினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பருப்பு கொள்முதலுக்காகக் கோரிய புதிய டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் ஜூன் மாத இறுதியில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நிலை தொடர்ந்தால், வெளிச்சந்தைகளில் பருப்பின் விலை கடுமையாக உயரும் அபாயம் உருவாகும் என பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர். இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துவரம்பருப்பு அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய தேவை என்பதால், இந்த டெண்டர் சிக்கல்களுக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.