

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 40 நிமிடங்களில் 4 விளையாட்டுகள் விளையாடி உலக சாதனையை படைத்துள்ளனர்.
தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு மற்றும் நவீன விளையாட்டு நிகழ்வு மாணவர்களின் திறனை நன்கு வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங், யோகா ஆகிய நான்கு விளையாட்டுகளை ஒரே நேரத்தில் சுமார் 40 நிமிடங்கள் விளையாடி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை நிகழ்வு மாணவர்களின் உடல் வலிமை, கவனம் மற்றும் பாரம்பரிய கலைகளின் மீதான ஆர்வத்தை மேம்படுத்துவதாக அமைந்தது.
இந்த சாதனை மாணவர்களிடையே தற்காப்புக் கலைகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இதற்கு முந்தைய சாதனையான 30 நிமிட சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை பதிவு செய்த நிலையில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கராத்தே என்பது ஆபத்தான சூழ்நிலைகளில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் நுட்பங்களை கற்றுத்தரும் ஒரு கலையாகும். இதன் மூலம் உடல் வலிமை, சகிப்புத்தன்மை, வேகம் மற்றும் நெகிழ்வுத் தன்மை கூடும். சிலம்பம் என்பது பாரம்பரிய தற்காப்பு கலை. இது உடல் வலிமை, மன ஒருமைப்பாடு மற்றும் தற்காப்பு திறனை மேம்படுத்தும். யோகா என்பதோ அலையும் மனதை அலையாமல் ஒரு நிலையில் வெளிப்படுத்தும் செயலாகும். தசைகளை வலுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அமைதியான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஸ்கேட்டிங் என்பது கால் தசைகளை வலுப்படுத்தி, உடலை வலுப்படுத்துதல், சமநிலை, ஒருங்கிணைப்பு(coordination), சகிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் முழு உடல் பயிற்சியாகும்.
சென்ற வருடம் 2025 ல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பள்ளி சார்பில் மாவட்ட அளவில் 30 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் தற்பொழுது நான்கு விளையாட்டுகளை 40 நிமிடங்கள் விளையாடி உலக சாதனையை மாணவர்கள் முறியடித்துள்ளது பாராட்டும் விதத்தில் உள்ளது.