முதல்வர் திறந்துவைத்த தரமற்ற காவலர் குடியிருப்பு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறியாளர்கள்!

முதல்வர் திறந்துவைத்த தரமற்ற காவலர் குடியிருப்பு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறியாளர்கள்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் சார்பில், சென்னை ஆயிரம்விளக்கு ஆண்டர்சன் சாலையில் காவலர்களுக்கான புதிய குடியிருப்பு ஒன்று கட்ட 186.5 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 1036 குடியிருப்புகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தைக் கட்ட 2015ம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த ஆர்.சி.சி. கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 2021ம் ஆண்டு அந்த நிறுவனம் அந்தக் குடியிருப்பின் 95 சதவிகிதப் பணிகளை முடித்தது.

அதன் பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் வண்ணம் பூசல் போன்ற பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தக் காவலர் குடியிருப்பைத் திறந்து வைத்தார். அந்தக் குடியிருப்பில் ஏராளமான காவலர் குடும்பங்கள் வசித்து வரத் தொடங்கினர்.

இந்நிலையில் அந்தக் காவலர் குடியிருப்பின் சுவர் பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும், கைவைத்தால் உதிர்ந்து கொட்டுவது போன்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இதேபோல், கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பு தரமில்லாமல் கட்டியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பும் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

தரமில்லாத காவலர் குடியிருப்பு கட்டப்படுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் அந்தக் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், கட்டடத்தின் குறைபாடுகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைச் சரிவர கவனிக்கத் தவறியதாக நிர்வாக பொறியாளர்கள் ஜகன்நாதன், உதவி நிர்வாக பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் கனகேஷ்வரன், ஜூனியர் பொறியாளர்கள் மாணிக்கம், மோகன் ராஜ், ஆறுமுகம் ஆகிய ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com