கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தபோதிலும், தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று சென்னையில் பிற்பகலில் சட்டென்று வானிலையில் மாற்றம் ஏற்றப்பட்டது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கோயம்பேடு குறிப்பாக வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மாநகர் பகுதிகள் ஒருசில இடங்களிலும் மழை பெய்து வெப்பம் தணிந்துள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த 5 நாட்களாக 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர்,உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கன மழை பெய்து வருகிறது. காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென பெய்த மழையால் ஜில்லென நகரமாக சென்னை மாறியது.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால், வெப்பம் தணிந்தது.
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். ஏற்கனவே வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.