சுண்டைக்காய்! பறிக்காமல் வீணாகும் அருமருந்து.

சுண்டைக்காய்! பறிக்காமல் வீணாகும் அருமருந்து.

ன்று நம் பாட்டி வீடுகளில் வாரந்தோறும் ஒரு நாளாவது வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் சுண்டைக்காய்கள் சாப்பாட்டில் இடம்பெறும். பல நோய்களுக்கு மருந்தாகும் சற்றே கசப்பும் துவர்ப்பும் ஆக இருக்கும் சுண்டைக்காய் தற்போது பலராலும் விரும்பப்படாமல் புறக்கணிக்கப் படுகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்து நாயக்கன்பட்டி கிராமத்திலும் அதனை ஒட்டி உள்ள செம்மண் கூடல் கிராமத்திலும் உள்ள ஏரியில் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பியவாறு காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்துநாயக்கன் பட்டியில் பல்வேறு பகுதிகளிலும் சாலை மற்றும் விவசாயத் தோட்டங்களின் ஓரங்களிலும் சுண்டைக்காய் செடிகள் செழித்து வளர்ந்துள்ளது. இந்த செடிகளில் சுண்டைக்காய்கள் சடை சடையாக காய்த்து தொங்குகிறது.

இந்த காய்களை அப்பகுதி மக்கள் பறிக்காமல் அப்படியே விடுவதால் வீணாகி வருகிறது. சுண்டக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக குடல் பாதிப்புகளை சரி செய்வது இந்த சுண்டைக்காய் கள்தான்.  அல்சர் புண்கள், சர்க்கரை ஆகியவற்றை குணப்படுத்தும். இரத்தத்தை சுத்திகரித்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுடன் மூலநோயை குணப்படுத்தவும் சுண்டைக்காய் அருமருந்தாக உள்ளது.

சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள் இரத்தத்தை அதிகரிக்கும். காய்கள்   கல்லீரல் மற்றும்  கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.

சுண்டையில்  புரதம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு  மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு  மிளகும் கறிவேப்பிலையும் சேர்த்து  வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால்  முலக்கிருமி மலத்துவாரத்தில் உள்ள  பூச்சிக்கடி முதலானவை நீங்கும்.

ஓமலூர் பகுதிகளில் நாட்டு சுண்டைக்காய் அதிகளவில் இயற்கையாக காய்த்து தொங்குகிறது. பொதுமக்களிடம் சுண்டைக்காய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதிகமாக சமைத்து சாப்பிடாமல் வீணடித்து விடுகின்றனர். கிராமமக்களுக்கு எளிதாக கிடைப்பதால் சுண்டைக்காய் அலட்சியமாக புறம் தள்ளுகின்றனர்.

இதனை தவிர்த்து கிராமப்புற விவசாயிகள் சுண்டக்காயை பறித்து நகரப்பகுதிகளில் விற்பனை செய்தால் வருவாய் கிடைப்பதுடன் மருத்துவக்குணம் உள்ள சுண்டைக்காய் நகரப் பகுதி மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைப்பதுடன் அதன் மருத்துவ குணம் தெரிந்து பயனடைவார்கள் எனவே சுண்டைக்காய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஸ்ட் புட் உணவுகளை விரும்பும் நாம் நம் பிள்ளைகளுக்கு காய்கறிகள் பழவகைகளையும் இது போன்ற மருத்துவகுணம் கொண்ட சுண்டைக்காய் பாகற்காய் போன்றவைகளையும் உணவுகளில் பழக்கப்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com