

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.
இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்க்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் son of Chidambaram Pillai வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். 30.3.2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி களுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய நீதி கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதி கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் இன்னொரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேறொரு தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக பாஜக துணை தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திங்கட்கிழமை இன்னொரு வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார். குஷ்பூவைத் தொடர்ந்து சுந்தர் சி யும் அரசியலில் களமிறங்குகிறார். முதல் முறையாக அவர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
மதுரை மத்திய தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.