

இந்துக்களின் தனிப்பட்ட சொத்துகள் மற்றும் குடும்பச் சொத்துகளை எப்படி பகிர வேண்டும் என்பதைக் குறித்து, 1956ஆம் ஆண்டு இந்துக் வாரிசுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்து கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான பரம்பரை சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பரம்பரை சொத்துக்கு பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்கள் உரிமை கோருவதைப் போல மகள்களும் உரிமை கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2005-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி, திருமணமானவர் அல்லது திருமணமாகாதவர் என்ற பாகுபாடின்றி, பெற்றோரின் பூர்வீகச் சொத்துக்களில் மகன்களுக்கு இணையான சம உரிமை மகள்களுக்கு உண்டு. அதாவது, குடும்ப சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் உரிமை வழங்கும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு சொத்து பகிா்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தை பொருந்தவரை பெற்றோரின் சொத்துக்களில் மகளுக்கு எந்தளவுக்கு உரிமை உள்ளது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லாமல் இன்னும் குழப்பமான நிலையே உள்ளது. பெற்றோர் தங்கள் தனிப்பட்ட சொத்தை உயில் எழுதிச் சுய விருப்பப்படி யாருக்காவது வழங்கலாம். ஆனால், உயில் இல்லாமல் ஒருவர் இறந்தால், அந்த சொத்துக்கு யார் உரிமையாளர்? எப்படி பகிரப்படும்? என்ற கேள்விகளுக்கு சட்டத்தில் என்ன விதிகள் உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
* தாய் அல்லது தந்தை ஒருவர் உயில் எழுதாமல் இறந்தால், அவர்களின் சொத்து எப்படிப் பகிரப்படும் என்பதை சட்டம் தெளிவாகக் கூறுகிறது. தாய் இறந்தால், மகன் மற்றும் மகளுக்கு சமமான பங்கு கிடைக்கும்; தந்தை உயிருடன் இருந்தால் அவருக்கும் ஒரு பங்கு இருக்கும். அதேபோல், தந்தை இறந்தாலும், மகன் மற்றும் மகளுக்கு சமமான பங்கு கிடைக்கிறது; தாய் உயிருடன் இருந்தால் அவருக்கும் உரிய பகுதி வழங்கப்படும்.
* 2005-க்கு முன் பிறந்திருந்தாலும், 2005-ல் சட்டம் வரும்போது தந்தை உயிருடன் இல்லாவிட்டாலும், மகள்களுக்கு பூர்வீகச் சொத்தில் சம பங்கு உண்டு.
* கூட்டுக் குடும்பச் சொத்தைப் பிரித்த பிறகு, மகளின் பங்கு தனிப்பட்ட சொத்தாக மாறும். இந்த சொத்தின் மீது அவளுக்கு முழு அதிகாரம் உண்டு, அதைப் பார்த்து அவள் விரும்பினால் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். மகள் உயில் எழுதினால், அவள் தனது பங்கைக் மற்றவர்களுக்கு வழங்கலாம். மகள் உயில் எழுதாமல் இறந்தால், சட்டத்தின் பிரிவு 6 விதிகளின்படி, அவளுடைய பங்கு வாரிசுகளுக்குச் செல்லும்.
* ஒரு தாய் சொந்தமாக சம்பாதித்த சொத்தாக இருந்தால், அந்த சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கும் முழு உரிமை அவருக்கே மட்டுமே உண்டு. அவர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் எனது சொத்துக்கள் மகன்களுக்கு மட்டுமே சேர வேண்டும் என்று தாய் உயில் எழுதி வைத்திருந்தால், அந்த சொத்தில் மகள்கள் எந்த விதமான சட்ட உரிமையும் கோர முடியாது. அதேசமயம் இந்த சொத்திற்காக கோர்ட்டை நாடினாலும் அந்த சொத்து கிடைக்காது. ஆனால் தாய் எந்தவிதமான உயிலும் எழுதாமல் இறந்துவிட்டால், மகன்களுக்கும் மகள்களுக்கும் சமமான பங்கு சட்டப்படி கிடைக்கும்.. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
* ஒரு பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தாலும் அவர் மறுமணம் செய்யாத பட்சத்தில் அந்தப் பெண்ணின் குழந்தைகளுக்கு தந்தையின் பூர்வீகச் சொத்தில் முழு உரிமையும் உண்டு. குடும்பத்தினர் தரமறுக்கும் பட்சத்தில் சட்டப்படியும் உரிமை கோரமுடியும்.
* அதேபோல் முன்னாள் கணவர் மறுமணம் செய்து அவருக்கு வேறு குழந்தைகள் இருந்தாலும் முதல் மனைவியின் மகனுக்கோ மகளுக்கோ பூர்வீக சொத்தில் உள்ள பங்கு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது, முழு உரிமையும் உள்ளது. மேலும் ஒருவருக்கு முதல் மனைவி மூலம் வாரிசுகள் இல்லை என்றால் அவர் மறைவிற்கு பிறகு அவரது சொத்து அவரது இரண்டாம் நிலை வாரிசுகளான பேரன் பேத்திகள் அல்லது சகோதரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
* தந்தையின் சொத்துரிமையை பொறுத்தவரை மகள்கள் திருமணமானவர் அல்லது திருமணமானவர்களாக இருந்தாலும் தந்தையின் சொத்தில் சமமான பங்கு பெற தகுதியுடையவர்கள். மகள்கள் பிறப்பிலேயே பங்குகாரர்களாக (Coparceners) கருதப்படுகிறார்கள் மற்றும் தந்தை உயில் எழுதாமல் இறந்துவிட்டால், மகள்கள் சொத்தைப் பிரித்து கேட்க முழு சட்ட உரிமை பெற்றுள்ளனர். அதேபோல் தந்தை தனது சுயமாக சம்பாதித்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க அவருக்கு உரிமை உண்டு. அப்படி வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்துவிட்டாலோ அல்லது குறிப்பிட்ட நபருக்கு மட்டும் என எழுதி வைத்தாலோ அதில் மற்ற வாரிசுகள் உரிமை கோர சட்டத்தில் இடமில்லை.
* அதேசமயம், தந்தை தான் சுயமாக சம்பாதித்த சொத்தை உயில் ஏதும் எழுதாமல் இறந்து விட்டால் அவருடைய நேரடி வாரிசுகள் என்ற அடிப்படையில் அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் மகள்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும். பிரச்சனை ஏற்படும் நிலையில், மகள்கள் வாரிசுரிமைச் சான்றிதழ் மூலம் சொத்து பங்கை சட்டப்படி கோரலாம்.
* அதேபோல் தாய் தனது மூதாதையர் (தாத்தா, பாட்டி) வழியாக வாரிசு அடிப்படையில் பெற்ற சொத்துக்களில் மகள்கள் சட்டப்படி பாகப்பிரிவினை கோர முழு அதிகாரமும் உண்டு. அதேசமயம் அந்த சொத்தை தர தாய் மறுத்தாலும் பூர்வீகச் சொத்து என்பதால் நீதிமன்றம் மூலம் மகள்கள் தங்களுக்கான பங்கை பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளது.
* ஒருவேளை வாரிசு இல்லாத தம்பதியினர் தங்களுக்கு உள்ள சொத்தை உயில் எழுதாமல் இறந்துவிட்டால் அவர்களின் இரண்டாம் நிலை வாரிசுகளான உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு அந்த சொத்துக்கள் சென்றடையும்.
* மூதாதையர் சொத்தில் ஒரு மகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது பங்கை கோரலாம். இருப்பினும், சொத்து பிரிக்கப்பட்டாலோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்டாலோ, சிக்கல்களைத் தவிர்க்க உடனடியாக சட்ட உதவியை நாட வேண்டும். தந்தை இறந்துவிட்டால், மகள் தனது பங்கை விரைவில் கோர வேண்டும், சட்ட நடவடிக்கைகளுக்கு பொருந்தக்கூடிய வரம்புகள் காலக்கெடுவைப் பின்பற்ற வேண்டும்.