உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பிரிஜ் பூஷன் மீது மீது மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர், பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக ஜந்தர் மந்தரில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை ஆணையம் அமைத்தது.

மேரி கோம் தலைமையிலான ஆணையம் இது குறித்து விசாரித்து விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன் பின்னரும் கூட, பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆணையத்தின் விசாரணைக்குப் பின்னும் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை, குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றமற்றவராக ஆக்க நிர்வாகம் முயல்கிறது என்று கருதிய இந்திய மல்யுத்த வீரங்கனைகள் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கினர். அவர்களது கோரிக்கை ஒன்று தான், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதே அது. தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஏழு மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதி பிஎஸ் நரசிம்ஹா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. அந்த மனு மீது டெல்லி போலீஸ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் வழக்கை வெள்ளியன்று மறுவிசாரணைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாதவகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com