ஆளுநர்கள் மாநில மசோதாக்கள் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் - உச்ச நீதி மன்றம் உத்தரவு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஆளுநர்கள் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதா குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநர்கள் மனுவுக்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தாலும், கூடுதல் கருத்துக்களுக்காக திருப்பி அனுப்புவதாக இருந்தாலும் அதனை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெலங்கானா அரசு , ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கினை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடு தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆளுநரிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்றும், சில மசோதாக்கள் மட்டும் கூடுதல் கருத்துக்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, மசோதாக்கள் நிலுவை என்பது பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே நிலவுவதாக குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மனுவை முடித்துவைத்த நீதிபதிகள், அரசியல் சாசனத்தின் 200-வது சட்டப்பிரிவில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டனர். எனவே, மனுவுக்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தாலும், கூடுதல் கருத்துக்களுக்காக திருப்பி அனுப்புவதாக இருந்தாலும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com