

ஆந்திராவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ மதப் போதகராக இருப்பவர் சிந்தாத ஆனந்த் என்பவர். இவர் தனது கிராமத்தில் ஒரு நாள் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது , உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் , ஜாதி அடிப்படையில் திட்டியதாகவும் , அவர்கள் மீது SC /ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்தரப்பினர், ஆனந்த் மதம்மாறி நீண்ட காலம் ஆகிவிட்டதால், வன்கொடுமை சட்டத்தின் கீழ் தங்கள் மீது புகார் தெரிவிக்க முடியாது என்று வாதிட்டனர்.
இந்த வழக்கு ஆந்திர உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மனுதாரர் , தீவிரமாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவது உறுதியானது. அதனால் புகார்தாரர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) புகாரை பதிவு செய்ய முடியாது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஹிந்து மதம் அல்லாமல் வேறு மதத்தை பின்பற்றும் போது , இனி SC /ST வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்துவோ , பட்டியல் சமூகத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை அனுபவிக்கவும் தகுதியற்றவர் ஆகிவிடுகிறார்.
இதன் காரணமாக எதிர் தரப்பினர் மீது வன்கொடுமை சட்டத்தின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர் மீதான தாக்குதல்கள் அல்லது அவமதிப்புகள் இருந்தால் , பொதுவான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (BNS/IPC) கீழ் புகார் அளிக்கலாமே தவிர வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த முடியாது , என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிநாத் தீர்ப்பளித்தார்.
ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து , உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்தி முடித்த பின்னர் , உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் படி ,"புகார்தாரர் தான் மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கவில்லை, அவர் தொடர்ந்து மத போதகராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மதம்மாறிய அவர் தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பில்(BC) வருகிறார். ஒருவர் பிறப்பின் அடிப்படையில் எந்த ஜாதியாக இருந்தாலும் , கடைபிடிக்கும் மதத்தைப் பொறுத்து SC/ST அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது.
1950-ஆம் ஆண்டின் சட்டப்படி , இந்திய அரசியலமைப்பின் 341-வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட ஆணையில் ஹிந்து மதத்தை சேர்ந்த சில பிரிவினர்களுக்கு மட்டுமே SC/ST அந்தஸ்து வழங்கப்பட்டது. பின்னர் ,1956-ல் சீக்கிய மதமும், 1990-ல் பௌத்த மதமும் இதில் இணைக்கப்பட்டன. ஆனால் , கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை ஜாதியை அங்கீகரிக்காத மதங்கள் என்பதால், அந்த மதங்களுக்கு மாறியவர்களுக்கு ஹிந்து மதத்தில் இருந்து பெற்ற SC/ST சமூக பாதுகாப்பு மற்றும் சலுகைகள்" ஆகியவற்றை கோரமுடியாது.
இறுதியாக இந்து , சீக்கியம் , பௌத்த மதம் அல்லாத வேறு மதத்திற்கு மாறும் பட்டியல் சமூகத்தினர் SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரமுடியாது என்ற ஆந்திர உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை , உச்ச நீதிமன்றமும் இன்று(மார்ச்.24) உறுதி செய்துள்ளது.